Skip to main content

சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விராட் கோலியின் இளம்படை...!

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அல்லது இந்தியா கோப்பையை வெல்லும் என்று கருதுகின்றனர். நம்பர் 1 அணி, நல்ல ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள், சொந்த நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை என இங்கிலாந்துக்கு சாதகமானவை அதிகம் உள்ளன. அதேசமயம் உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், பவுலிங்கில் மிரட்டும் பும்ரா என இந்தியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக உருவெடுத்துள்ளது.  

 

 

ii

 

வெற்றிகரமான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தொடர்ந்து நியூசிலாந்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது. கடைசியாக நியூசிலாந்து அணி விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 14 போட்டிகளில் வென்று பலம்பொருந்திய அணியாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என இருபெரும் அணிகளை அதன் சொந்த மண்ணில் வென்ற நம்பிக்கையுடன் இந்தியா நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

 

உலகக் கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அணியின் காம்பிநேஷனை தேர்வு செய்ய இந்த தொடர் உதவும். இரு அணிகளிலும் இன்னும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் களமிறங்கும் வீரர்கள் முடிவு செய்யப்படமால் உள்ளனர். அதேசமயம் இரு அணிகளும் உலகின் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தன்வசம் வைத்துள்ளது.

 

குப்தில், வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ரோஸ் டெய்லர், சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த தொடரில் 3 போட்டிகளில் 281 ரன்கள், 93.67 சராசரி வைத்துள்ளார். கடந்த ஆண்டு  10 இன்னிங்ஸ்களில்   639 ரன்கள் மற்றும் 91.29 சராசரி. வில்லியம்சன் மற்றும் குப்திலும் 45+ சராசரி வைத்துள்ளனர். வில்லியம்சன் நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 361 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 72.00.

 

முன்ரோ, நிக்கோலஸ் ஆகியோர் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளனர். இலங்கை தொடரில் நிக்கோலஸ் 3 போட்டிகளில் 132 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 171 ரன்கள் குவித்துள்ளார். ஆல்-ரவுண்டர்கள் நிறைந்த அணியாக நியூசிலாந்து உள்ளது. போல்ட், சவுதி, ஹென்ரி என ஃபாஸ்ட் பவுலிங்கும்,  மிட்செல் சேன்ட்னர், சோதி என ஸ்பின் பவுலிங்கும் வலுவாக உள்ளது. 

 

தற்போது முடிந்த இலங்கை தொடரில் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி 300+ ரன்களை எடுத்தது. இதனால் இந்த தொடரிலும் ரன்கள் அதிகம் விளாசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனி நியூசிலாந்தில் 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 541 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 90, ஸ்ட்ரைக் ரேட் 91. 

 

கடைசியாக விளையாடிய 5 தொடர்களில் கோலியின் பேட்டிங் சராசரி 51, 151, 63, 186, 88. ஒப்பனிங்கில் சர்மா, தவான் ஜோடி சிறப்பாக விளையாடி வருகிறது. மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தோனி மற்றும் கார்த்திக் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேதர் ஜாதவ் மற்றும் ராயுடு ஆகியோரில் ஒருவர் மட்டுமே அணியில் விளையாட வாய்ப்புள்ள நிலையில் இந்த தொடரின் மூலம் இருவரில் யார் அணியில் இடம்பெறுவார் என்பது தீர்மானிக்கப்படும். 

 

ii

 


குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின் பவுலர்கள் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடியுள்ளனர். புவனேஷ்வர் குமார், முகமது ஷமியுடன் விளையாடும் மூன்றாவது பவுலர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

 

இந்திய அணி நியூசிலாந்திற்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுதான் வென்றுள்ளது. கடைசியாக நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை கண்டுள்ளது. ஒரு போட்டி டை ஆனது. அதனால் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்குகிறது இந்திய அணி. 

 

2015 உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் 70% வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா 66%, தென் ஆப்பிரிக்கா 62%,  நியூசிலாந்து 60% சதவீத வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஃபார்மில் உள்ள இந்தியாவும், நியூசிலாந்தும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியது இந்திய அணி. நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அணி 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9 வெற்றி, 18 தோல்வி. இந்த வரலாற்றை மாற்றி நியூசிலாந்திலும் இந்திய அணி சரித்திரம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.