Skip to main content

கேலோ இந்தியா போட்டி; அண்ணாமலை பல்கலை. பெண்கள் அணி வெண்கலப் பதக்கம்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Annamalai University. Women's team bronze medal

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் 2022 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பல்கலைக்கழகப் போட்டிகள் மே 24 முதல் ஜூன் 3 வரை நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

 

தென்மண்டல பல்கலைக்கழகப் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெறுகின்ற அணியினர் அகில இந்தியப் பல்கலைக்கழகப் போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். அகில இந்தியப் பல்கலைக்கழகப் போட்டிகளில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்ற 8 அணிகள் பல்கலைக்கழகப் போட்டிகளிலேயே முதல் தரப் போட்டியான கேலோ இந்தியா போட்டிகளில் பங்கு பெறத் தகுதி பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் இந்த போட்டியினை நடத்தி வருகின்றன.

 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெண்கலப் பதக்கம் வென்ற கால்பந்து வீராங்கனைகளுக்கும் பயிற்றுநருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர். இராம. கதிரேசன் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் கால்பந்து பயிற்றுநர் பேராசிரியர் சிவக்குமார், பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ராஜசேகரன் உடன் இருந்தனர்.