Skip to main content

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்: சாம்பியன் சறுக்க காரணம் என்ன?

Published on 15/10/2023 | Edited on 16/10/2023

 

 

Afghanistan shocked England: What caused the champion to slip?

 

உலக கோப்பை 2023 இன் முதல் திருப்புமுனையாக நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

 

உலக கோப்பையின் 13 வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் மற்றும் ஜத்ரன் சிறப்பான துவக்கம் தந்தனர். ஜத்ரன் நிதானமாக ஆட, அதிரடி காட்டிய குர்பாஸ் அரை சதம் கடந்தார்.  ஜத்ரன் 28 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரஹ்மத்தும் மூன்று ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

 

தொடர்ந்து சிறப்பாக ஆடிய  குர்பாஸ் 80 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் 8 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்து வந்த சகிதி, அஜ்மத்துல்லா,  நபி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க,  அலிகில்லின் அரைசதம் (58) மற்றும் முஜீப்பின் 28 ரன்கள் கை கொடுக்க, 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 284 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரசித் 3 விக்கெட்டுகள் எடுத்தார். வுட் 2 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன், டாப்லி,  ரூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

 

பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ரூட்டும் 11 ரன்களில் முஜிப்பின் சுழலில் வீழ்ந்தார். ஓரளவு நிதானமாக ஆடிய மாலன் 32 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து வந்த கேப்டன் பட்லர் 9 ரன்களிலும், அதிரடி வீரர்கள் லிவிங்ஸ்டன் மற்றும் ஷாம்கரன் ஆகியோர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் புரூக் மட்டும் அரை சதம் கடந்தார்.

 

அடுத்தடுத்து வந்த வீரர்கள் கைகொடுக்க தவற, பொறுமை இழந்த புரூக்கும் 66 ரன்களில் முஜீப் பந்தில் ஆட்டமிழந்தார். முஜீப், ரஷீத் கான்,  நபி என மூவேந்தர் சுழல் கூட்டணியில் இங்கிலாந்து அணி சுழற்றி அடிக்கப்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஆப்கானிஸ்தான் அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.  முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் தலா 3 விக்கட்டுகளும், நபி 2 விக்கெட்டுகளும், ஃபரூக்கி மற்றும் நவீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகள் எடுத்த முஜிபுர் ரஹ்மான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீச தேர்ந்தெடுத்ததே அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது.  ஆப்கானிஸ்தான் அணிக்கு வலுவான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதை கணக்கில் கொள்ளாமல், முதலில் பந்துவீச தேர்ந்தெடுத்தது, இங்கிலாந்தின் தவறான முடிவாகிவிட்டது. இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்து வீச்சுக்கு தடுமாறுவார்கள் என்று தெரிந்தும், முதலில் பந்து வீச தீர்மானித்தது தவறான முடிவாகிவிட்டது என்றும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஆன அனில் கும்ப்ளே, பாகிஸ்தான் அணி உடனான டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியது டெல்லி பெரோசா கோட்லா மைதானம் என்று முன்பு அழைக்கப்பட்ட,  தற்போது அருண் ஜெட்லி மைதானம் என்று அழைக்கப்படும், இதே மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

வெ.அருண்குமார் 


 

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்  

Next Story

IND vs ENG : இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்கு!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
IND vs ENG : 192 runs target for Indian team

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் (23.02.2024) தொடங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி 307 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 4 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 192 ரன்களை இலக்கை இந்திய அணிக்கு  நிர்ணயித்துள்ளது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் 5 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும்,  ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

மேலும் இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 35 வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.