உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2500-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்,ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவே பாதிக்கப்படுகின்றனர். கரோனா அதிகம் சேதாரம் விளைவித்த சீனா, இத்தாலி, ஜெர்மனி, போன்ற நாடுகளிலும் பெண்கள் குறைவான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 2.8 சதவீத ஆண்கள் உயிரிழந்த நிலையில், 1.7 சதவீத பெண்கள் மட்டுமே இந்தக் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.ஆண்கள் மட்டும் அதிக அளவில் உயிரிழப்பதற்கு மருத்துவர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கிறார்கள்.
இதையும் தாண்டி ஐரோப்பாவில் உயரிழந்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. ஆண்களுக்கு மருத்துவமனைக்குச் செல்லுதலில் உள்ள அலட்சியம்,புகை பிடிக்கும் காரணம், கைகழுவும் பழக்கம் பெண்கள் அளவுக்கு இல்லாதது முதலியவை ஆண்கள் அதிக அளவுக்குப் பாதிப்பதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றது. இது எல்லாவற்றையும் விட பெண்களுக்கு இயல்பிலேயே ஆண்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதே நோய் தாக்குதல் குறைவதற்கு காரணமாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.