Skip to main content

உங்கள் செருப்பைக் கொஞ்சம் கவனியுங்கள்... - வழியெல்லாம் வாழ்வோம் #2

Published on 07/03/2018 | Edited on 08/03/2018
valiyellaam vaalvom 2



உடலில் வலி தரக்கூடிய இடங்களில் குதிங்காலுக்கு முக்கியப்பங்கு உள்ளது. "காலை ஊன்றி நடக்கும் போது வலிக்கிறது" என்பதுதான் இந்த வலியுடையோர் கூறும் முதல் அறிகுறி. முக்கியமாக, "இரவில் தூங்கி காலையில் விழித்தவுடன், காலை ஊன்றவே முடிவதில்லை" எனவும், "எங்காவது நீண்ட நேரம் அமர்ந்துவிட்டு, பின் நடக்கத் தொடங்கும்போது அதிக வலி இருக்கிறது" என்றும் கூறக் கேட்டிருப்போம்.

அப்படி என்னதான் இருக்கிறது- பாதத்திலும், குதிங்காலிலும்?

பாதம் என்பது, நம் உடலில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள  ஒரு பாகம். பாதம் கூம்பு போன்ற வடிவம் உடையது. கால்கேனியஸ் (Calcaneus) என்ற குதிங்கால் எலும்பில் தொடங்கி, ஐந்து பாகமாக விரிந்து ஐந்து விரல்களுக்கும் செல்லும் தசைகளை உடைய கூம்பு வடிவிலான பாகம் இது. குதிங்கால் எலும்பில் தோன்றும் பிரச்சனைகளும், ஐந்து பிரிவாக விரிந்து செல்லும் தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளும், தசையை சூழ்ந்துள்ள தோலின் அடிப்பாகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், குதிங்கால் வலியாகப் பிரதிபலிக்கிறது.

 

foot

 

குதிங்கால் எலும்பில் ஏற்படும் பிரச்சனைகள்

1. குதிங்கால் அடி எலும்பில் ஏற்படும் தொடர் காயம், எலும்பு வளர்ச்சியை தூண்டுகிறது. அவ்வளர்ச்சியில் சேரும் கால்சியம், Calcaneal Spur எனப்படும் குதிங்கால் எலும்பின் வெளிவளர்ச்சியாக மாறி, அப்பகுதியின் அடியில் உள்ள தசைகளில்  அழுத்தி வலியை ஏற்படுத்துகிறது.

2. பின் குதிங்கால் எலும்பில் ஏற்படும் அதீத வளர்ச்சியால் ஏற்படும் மாற்றமும் (Haglund Deformity)  வலியைத் தூண்டும் காரணியாகிறது.


அடிப்பாத தசைகளில் ஏற்படும் பிரச்சனைகள்

1. அடிப்பாத தசையிலோ அல்லது கணுக்கால் மூட்டு சவ்விலோ (Bursa) ஏற்படும் நோய்த்தொற்று

2. தசைகளின் அதிகப்படியான வேலை

3. அடிப்பாத வளைவு (Arches of Root) சீர் இல்லாமை
 

மூட்டுகளினால் ஏற்படும் பிரச்சனைகள்

1. கீல்வாதம் மற்றும் பிற வாதங்கள்


 

heel


 

வாழ்வியல் பிரச்சனைகள்

1. சரியான வகையிலான காலணிகளை அணியாமல் இருப்பது

2.  குதி அதிக உயரம் உடைய காலணிகளை அணிவது (High Heels)

3. காலணியின் அடிப்பாகம் அதிக கடினமாக இருக்கும் வகையிலான, சீரான அடிப்பாகம் இல்லாத காலணிகளை அணிவது.
 

இவ்வாறாக மேற்கண்ட பிரச்சனைகளால் குதிங்கால் வலி வரக்கூடும்.

வலியை எப்படி தவிர்ப்பது?

1. குதிங்கால் வலி நமக்கு இருக்கிறதோ இல்லையோ, சரியான அளவிலான, பாத வடிவமைப்பு உடைய காலணிகளை அணிவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.

2. அதிக குதி உயரம் உள்ள காலணிகளை (High Heels) அணிவதைத் தவிர்ப்பது அதிமுக்கியமாகும்.

3. குழந்தைகளுக்கு பாதத்தின் வளைவு சீராக இல்லையென்றால், இயன்முறை மருத்துவரை அணுகி வளைவு சீராக்கும் சிகிச்சை/பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இயன்முறை மருத்துவரின் அறிவுரையின் பேரில் சரியான வளைவுகளை உண்டாக்கும் காலணிகளை பயன்படுத்த வேண்டும்.
உங்களுக்கு குதிங்கால் வலி வருகிறது என்றால் முதலில் உங்கள் நினைவுக்கு வரவேண்டியது, நீங்கள் அணியும் காலணிகளே.

 

footwear


அடிப்பாத தசைகளினால் ஏற்படும் பாதவலிக்கு தொடர் இயன்முறை மருத்துவப் பயிற்சியும், இயன்முறை மருத்துவ சிகிச்சையும் நிரந்தரத் தீர்வு தரும். குதிங்கால் வலி ஆரம்பிப்பதை நாம் உணர்ந்தவுடன், வலி உள்ள இடத்தில் பனிக்கட்டியைக் கொண்டு அழுத்தி வட்ட சுழற்சிமுறையில் 15 நிமிடம் தொடர்ந்து தேய்க்கவேண்டும். இதை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யவேண்டும்.
 

நீண்ட நாள்களாக குதிங்கால் வலி இருப்போரும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டோரும், முதலில் பிசியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சை மூலம் வலியைக் குறைத்து, இயன்முறை மருத்துவப் பயிற்சிகள் மூலம் வலி வருவதைத் தடுக்க முடிகிறதா என்பதை உறுதி செய்துவிட்டு, அதன்பின் தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை பற்றி சிந்திக்கலாம். ஏனெனில், குதிங்கால் வலிக்காக செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் நூறு விழுக்காடு நிரந்தரத் தீர்வைத் தருவதில்லை என்று சில ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.
 

விளையாட்டு வீரர்கள், அதிக உடற்பயிற்சி செய்வோர், நடைப்பயிற்சி மேற்கொள்வோர் என அனைவரும் ஓர் இயன்முறை மருத்துவரின் அறிவுரையைப் பெற்றுக்கொள்வது அவசியம். உடலில் ஏற்படும் எந்த வலியாக இருந்தாலும், அதைக் குறைக்க மற்றும் தவிர்க்க பல உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால், அப்பயிற்சிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொருவரின் உடல்வாகைப் பொறுத்து வேறுபடுகின்றன. எனவே, சரியான இயன்முறை மருத்துவரிடம் முறையான பயிற்சியும் சிகிச்சையும் பெற்றுக்கொள்தல் அவசியமாகிறது. அதன்மூலம் குதிங்கால் வலியினின்றும் குணமடையலாம்.
 

டாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்
தலைமை இயன்முறை மருத்துவர்
மயோபதி ஆராய்ச்சி மையம்
ஜீவன் அறக்கட்டளை
 

Next Story

நீண்ட காலம் யார் தான் வாழ்கிறார்கள்? - டாக்டர் சசிகுமார் குருநாதன் விளக்கம் !

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
 Dr SasiKumar Gurunathan Interview

முந்தைய காலங்களில் இருந்தவர்கள் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்பொழுது உள்ளவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இது மருத்துவக் கூற்றின்படி எந்த அளவிற்கு உண்மை என்ற நம் கேள்விக்கு பிரபல முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் பதிலளிக்கிறார்.

முந்தைய காலங்களில் உள்ளவர்களை விட இப்போது இருப்பவர்கள் வாழும் காலம் என்பது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் வாழும் ஆண்டுகள் 40 முதல் 60 வயதிற்குள் முடிந்து விடும். ஆனால் இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக 70 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள். நம்முடைய வாழ்வியலில் மாற்றங்கள் இருப்பினும், இப்பொழுது மருத்துவம், அறிவியல் எல்லாம் அடுத்தகட்டத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் இப்பொழுது சிறப்பானதொரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

முந்தைய காலங்களில் கேன்சர் போன்ற நோய்களுக்கெல்லாம் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வந்தாலே இறந்துவிடுவார்கள் என்ற சூழல்தான் நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது எல்லா நோய்களுக்குமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இறப்பின் அளவு குறைந்திருக்கிறது. நோய்களை குணப்படுத்த முடியும், கட்டுக்குள் வைக்க முடியும். 

வெளிநாடுகளில் வயதாகி விட்டாலே தனக்கென்று ஒரு மருத்துவரை அடிக்கடி அணுகி நோய் எதாவது இருக்கிறதா? உணவில், வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நம் நாட்டில் வயதானவர்கள் பலர் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டேன். வேறு மருத்துவமுறையை அணுகி நோயை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று செல்வதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் மாற்று மருத்துவ மருந்துகளை ஒரு எக்ஸ்ட்ரா காம்ப்ளிமெண்டரியாக எடுத்துக் கொள்வார்களே தவிர அதையே நம்பி இருக்கமாட்டார்கள். 

மாற்று மருத்துவத்தை நோக்கி போகிறவர்கள் அலோபதி மருந்துகளை கெமிக்கல் என்கிறார்கள். கெமிக்கல் என்று எதுவும் தனியாக வந்து விடுவதில்லை, இங்கிருக்கிற பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. அவைதான் மருந்து, மாத்திரை, ஊசிகளாக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுமில்லை. அவற்றை இப்போது கண்டறிந்து பயன்படுத்தப்படுவதால் இறப்பின் விகிதம் குறைந்து இப்பொழுது உள்ள மக்கள் தான் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்