Skip to main content

'கப சுர' குடிநீர் என்பது நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டும்தான்... தேடி அலைய வேண்டிய தேவையில்லை - சித்த மருத்துவர் சிவராமன்!

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  இந்நிலையில் இதுதொடர்பாக சித்த மருத்துவர் சிவ ராமன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கரோனா தொடர்பாகச் சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  அதில் " இன்றைக்கு நமக்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மிக முக்கியமானது ஊரடங்கு மட்டும்தான். அடுத்த இரண்டு வாரங்கள் முறையாக ஊரடங்கை பின்பற்றுவது என்பது மிக முக்கியமானது. சமூகப் பரவல் என்பதைத் தடுப்பதற்கு நம்மை நாம் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமான ஒன்று. நம்மைத் தனிமைப் படுத்திக்கொள்ளதன் மூலமே இந்த கரோனா வைரஸிடம் இருந்து நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். அதற்கு நாம் அனைவரும் அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 


இந்த கப சுர குடிநீர் என்பது ஆயுஷ் துறையும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையமும் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களுக்கும் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக இதனைப் பரிந்துரை செய்துள்ளார்கள். ஆகையால் இதனை அனைவரும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. இதனால் ஊரடங்கை மீற வேண்டியதும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்திக்காக சாப்பிடும் சாதாரண ஒன்றுதான். எனவே இதனைத் தேடி ரோட்டில் அலைந்து ஊரடங்கை மீறி பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.