Skip to main content

நீங்கள் நாள்தோறும் செய்யும் நடைபயிற்சி சரியா? - வழியெல்லாம் வாழ்வோம் #1

Published on 28/02/2018 | Edited on 28/02/2018
vazhiyellam vaalvom

 

வாழ்க்கை என்பதொரு பெரும் பயணம். அந்தப் பயணத்தை, பாதுகாப்பாயும்; தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாயும் அமைத்தல் என்பது நம் அனைவரின் விருப்பம். இந்தப் பயணமெனும் வழியெல்லாம் வலியில்லாத பெருவாழ்வு வாழ்தல் அனைவரின் உரிமை. அவ்வுரிமையைப் பெற சில கடமைகள் செய்ய வேண்டும். அத்தகு கடமைகளுள் ஒன்று உடற்பயிற்சி. அதிலும் குறிப்பாய் நடைப்பயிற்சி.

இன்று வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளோர் உடல் எடை அதிகம் உள்ளோர் உட்பட அனைவருக்கும் மருத்துவர்களால் நடைப்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. முதலில் நடைப்பயிற்சியின் அடிப்படையை அறிந்து கொள்வோம். உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க, உடல் எடையைக் குறைக்க மற்றும் பிற உடல் உபாதைகளைக் குறைக்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர், குறைந்தது 45 நிமிடங்களுக்கு அதிகமாக நடந்தால் மட்டுமே முழுப்பயனை அடைய முடியும். முதல் 45 நிமிடம் வரை, நடைப்பயிற்சிக்கு முந்தைய வேளையில் நாம் எடுத்துக்கொண்ட உணவில் இருந்த குளுக்கோஸ் கரைவதற்கு மட்டுமே போதுமானதாக அமையும். 45 நிமிடங்களுக்குப் பிந்தைய நடையே, நமது இடுப்பு, தொடை, வயிறு, கை, கால்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது.

ஆனால், அவ்வளவு நேரம் நடப்பதென்பது, பல நேரங்களில் நடைமுறையில் சாத்தியமில்லாக் காரியம். காரணம் நமது மூட்டுகளில் ஏற்படும் வலி.
 

walking


இந்த வலியோடு தொடர்ந்து நடப்பது, மூட்டுகளின் உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் சாதாரணமாக நடப்பதில் கூட சிக்கல் வரலாம். எனவே, நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அனைவரும் Resisted Exercise என்று சொல்லக்கூடிய எடை தூக்கும் பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தினால் மட்டுமே, நாம் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள உகந்த சூழல் உருவாகும். அதற்காகவே இந்த எடை தூக்கும் பயிற்சி. வயது முதிர்ந்தோரும் கூடுமானவரை அவசியமாய் எடை தூக்கல் பயிற்சியில் ஈடுபட வேண்டும். தசையின் வலு என்பது மூட்டுகளை மட்டும் காப்பாற்றுவதற்கு அல்ல.

நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்படி எடுத்துச் செல்லப்பட்ட உணவு முறையாக பயன்படுத்தப்பட, இந்த நடைப்பயிற்சியும் எடை தூக்கும் பயிற்சியும் அதி முக்கியமாகும்.

எடுத்துக்காட்டாக, கால்சியம் சத்து; எலும்புகள், தசை, தசை நார்கள் என்று அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான ஒன்று. நாம் கால்சியம் நிறைந்த உணவை உட்கொண்டாலோ அல்லது கால்சிய மாத்திரைகளை உட்கொண்டாலோ அவை வயிற்றுக்குள் செல்கின்றன. அங்கிருந்து கால்சியசத்தை குடல் உட்கிரகித்து, தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அனுப்பவேண்டும். இந்தப் பரிமாற்றம் நிகழ நடைப்பயிற்சியும், சூரிய ஒளியும் அவசியமாகின்றன.

 

joint pain



இதுபோலவே இன்னபிற சத்துக்களும் தேவையான உறுப்புகளைச் சரியாகச் சென்றடைய நடைப்பயிற்சி அவசியமாகிறது.

மேலும் உடல் எடையைக் கூட்ட மற்றும் உடல் நல்ல வடிவம் பெற என தசையை வலுவூட்டும் பயிற்சிகள் எல்லாம், இளையவர்களுக்கு மட்டுமானவை என்ற தவறான சிந்தனையை நம் பொதுப்புத்தியிலிருந்து நீக்கி; எடை சார்ந்த பயிற்சிகளை அனைவரையும் பின்பற்ற வைப்பது முக்கியம். தசையை வலுப்படுத்தும் பயிற்சிகளோடு கூடிய நடைப்பயிற்சியே முழுமையான பயன் தரும். தசையை வலுப்படுத்தும் பயிற்சியில்லாத நடைப்பயிற்சி, மூட்டு வலியில் நம்மை முடங்கச் செய்துவிடும். நம் உடலுக்கு ஏற்ற தசைவலு பயிற்சியின் அளவு, நடைப்பயிற்சியின் அளவு, பயிற்சிகளின் போது அணியப்பட வேண்டிய காலணிகளின் தன்மை ஆகியவற்றை அறிய அருகில் உள்ள இயன்முறை மருத்துவமனைகளை அணுகி இயன்முறை மருத்துவர்களின் முறையான ஆலோசனைகளை பெற்றுப் பயனடைய வேண்டும். "பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்" என்பது பழமொழி. "நடக்கத் தெரிந்தால் நன்மை கூடும்" என்பது புதுமொழி.


டாக்டர். சு. டேனியல் ராஜசுந்தரம்
தலைமை இயன்முறை மருத்துவர் 
மயோபதி ஆராய்ச்சி மையம்
ஜீவன் அறக்கட்டளை

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.