Skip to main content

உங்கள் ஜாதகப்படி திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

 Do you know how marriage will work according to your horoscope?

 

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு. ஒருவகையில் அது தவிர்க்கக்கூடாத ஒன்று என்றும் சொல்லலாம். இந்தத் திருமணம் சிலருக்கு வரமாகவும், சிலருக்கு "ஏன்தான் திருமணம் நடந்ததோ?' என்று நொந்துகொள்ளும் வகையில் சாபமாகவும் அமைகிறது. பத்து பொருத்தங்களும் இருப்பதாகக் கூறப்பட்டு கோலாகலமாக நடந்த திருமணங்கள் கூட தோல்வியில் முடியும் விசித்திரமும் நடக்கத்தான் செய்கிறது.

 

சிலருக்கு முதல் திருமணமே முப்பது வயதைக் கடந்த பின்னும் நடக்குமா என்ற ஊசலாட்டத்தில் இருப்பதையும், சிலருக்கு திருமணம் நடந்தும் ஏதோ காரணத்தால் ‘மண முறிவு' ஏற்படுவதையும், வெகு சிலருக்கு ‘விவாகரத்து’ கிடைப்பதில் கூட சிக்கல்கள் ஏற்பட்டு வழக்கு நீண்டு கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. சிலருக்கு மனைவி அல்லது கணவன் இறந்துபோவது, விவாகரத்து பெறுவது ஆகிய காரணங்களால் முதல் திருமணம் முடிவுக்கு வந்து இரண்டாம் திருமணம் நிகழும். இந்த இரண்டாவது திருமணம் நடப்பதும் சிலருக்கு தாமதமாகும்.

 

இப்படி திருமணம் சார்ந்த அனைத்துமே அவரவர் ஜாதகப்படி வெவ்வேறு விதமாக அமைகிறது. ஒருவரது திருமணம் எப்படி அமையுமென்பதை அவர்களது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ண வரும் ‘ஏழாம் பாவம்’ என்னும் களத்திர ஸ்தானத்தை வைத்து அறியலாம். இத்துடன் ஏழாம் பாவத்தின் அதிபதி, அதன் வலிமை, ஏழாம் பாவத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள், அவர்களின் நிலை, ஏழாம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்கள், அவற்றின் வலிமை இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஜாதகர் - ஜாதகிக்கு நடக்கும் தசை மற்றும் புக்தியின் அதிபதிகளாக வரும் கிரகங்கள் ஒருவருக்கொருவர் சமசப்தமமாக சஞ்சரித்தால்- அதாவது ஒருவர் இருக்கும் இடத்திலிருந்து மற்றவர் ஏழாவது வீட்டில் இருந்தால், ஜாதகர் - ஜாதகிக்கு திருமணம் விரைவில் நடக்குமென்று கூறலாம்.

 

இதேபோல நவாம்ச கட்டத்தில் லக்னத்துக்கு இரண்டாவது இடமெனப்படும் குடும்ப ஸ்தானத்தில் தசாநாதனும் புக்திநாதனும் இணைந்து காணப்பட்டாலும் திருமணம் சீக்கிரமாகவே நடக்குமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேலும் மேற்கூறிய இருவரும் சேர்ந்து நவாம்சத்தில் எந்த இடத்தில் அமைந்திருந்தாலும் ஜாதகருக்கு திருமணம் துரிதமாகவே நடைபெறும் எனலாம். சிலருக்கு, ‘கல்யாணமே செய்யாமல் இருந்திருக்கலாம். நிம்மதியாகவாவது இருந்திருக்கும். இப்படி தினமும் போராட்டமாக இருக்கிறதே' என்று சலித்துக்கொள்ளும் அளவுக்கு ஓயாத சண்டையும் சச்சரவுமாக இருக்கும். சிலருக்கு திருமண வாழ்க்கையே நரகமாவதும் உண்டு. அடிதடி, வம்பு வழக்கும் ஏற்படலாம். நவாம்ச லக்னம் ராசிக் கட்டத்தில் அமைந்துள்ள ஜனன லக்னத்துக்கு ஆறாவதாக அமைந்தால், மேற்கூறியபடி திருமணம் அமையும்.

 

இதேபோல சிலருக்கு திருமணமான ஒருசில நாட்களிலேயே பரஸ்பரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவருக்கு பிடிப்பில்லாமல், ஏன் திருமணம் செய்துகொண்டோமோ என்று மனம் கசந்துபோகும் நிலை ஏற்படும். வெளியில் சொல்ல முடியாத வேதனைகளும், சம்பவங்களும் ஏற்படலாம். சுருக்கமாகக் கூறினால் இவர்கள் திருமணம் ஒரு தோல்வி என்றே சொல்லலாம். இதற்கு ஜாதகரின் ஜென்ம லக்னத்திலிருந்து எட்டாவதாக நவாம்ச கட்டத்தில் லக்னம் அமைந்திருப்பதைக் காரணமாகக் கூறலாம்.

 

சிலருக்கு ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி; கடன் வாங்கியும் பட்டினி' என்ற கதையாக, கைக்கெட்டியது வாய்க்கெட்டாத கதையாக, திருமணமாகியும் கணவன்- மனைவி சேர்ந்து வாழ முடியாமல், தொழில் அல்லது வேலை காரணமாக தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நிலையும் காணப்படும். இதற்கு ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் நவாம்ச லக்னம் அமைந்துள்ள வீட்டின் ‘விரயஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் வீடாக அமைந்திருப்பதே காரணம்.

 

விரைவாகத் திருமணம் நடக்க வேண்டுமென்பதே திருமணமாகும் வயதை எட்டியவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கனவாக இருக்கும். இதற்கும் அவரவர் ஜாதகப்படி அமைந்துள்ள கிரக அமைப்பே காரணம். திருமணம் பற்றிய கேள்விக்கு விடையறிய வேண்டுமானால் முதலில் ஆராய வேண்டியது ஏழாம் பாவமே. உரிய காலத்தில் திருமணம் நடைபெற பல கிரக அமைப்புகள் காரணமாக இருந்தாலும், இளம் வயதில் இனிமையான குணம், நல்ல அழகு, எதிர்பார்க்கும் தகுதிகளோடு வாழ்க்கைத் துணை சிலருக்கு அமைவதற்கு ஏழாமிடத்தின் அதிபதி என்னும் களத்திர ஸ்தானாதிபதி, ஜென்ம லக்னத்திலிருந்து ஒன்பதாமிடம் என்னும் ஒப்பரிய இடத்தில் அமர்ந்திருப்பதே காரணம்.

 

இந்த ஒன்பதாமிடம் என்பது பாக்கியஸ்தானம் மட்டுமல்ல; இதை பித்ரு ஸ்தானம் என்றும் கூறுவார்கள். பித்ருக்கள் - அதாவது நம் குல முன்னோர்களைப் பற்றியும் இந்த பாவத்தை வைத்தே அறியலாம். இங்கே தெளிவாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். பொதுவாக ஒரு குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் எந்தத் தடையுமில்லாமல் உரிய காலத்தில் நடக்க வேண்டுமானால் அதற்கு குலதெய்வத்தின் ஆசியும், குல முன்னோர்களின் அருளாசியும் மிகமிக அவசியம். குறிப்பாக குல முன்னோர்களான பித்ருக்களின் ஆசிக்கு மாறாக சாபம் இருந்தால், அந்தக் குடும்பங்களில் அகால மரணம், உரிய காலத்தில் திருமணம் நடைபெறாமல் போவது, குழந்தை பாக்கியம் கிட்டாமல் தாமதமேற்படுவது, அப்படியே பிறந்தாலும் ஏதாவது குறை இருப்பது, சண்டை சச்சரவுகள், கணவன் - மனைவி சேர முடியாமல் போவது, விவாகரத்து என்று பல சங்கடங்கள் ஏற்படும். குலதெய்வத்தைத் தெரிந்து கொள்ளாமலோ அல்லது வேறு தெய்வத்தை தங்கள் குலதெய்வமாக நினைத்தோ அல்லது இஷ்டமான தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்டோ வருவார்கள். இதுவும் தவறானதே. இதனாலும் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

 

பித்ரு சாபம், தேவதா சாபம் நீங்க உரிய பரிகாரங்களாக பித்ருசாப நிவர்த்தி, தேவதானுக்ரஹ விருத்தி ஹோமங்கள் மற்றும் உரிய எந்திரப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது, ரட்சாதாரணம் ஏற்று மந்திரோபதேசம் பெற்று உரிய மந்திரத்தை குருமுகமாக ஏற்று ஜெபித்து வருவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

 

திருமணம் மூலம் அமையும் குடும்பம் பற்றிக் கூறும் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானத்தின் அதிபதிக்கும் விரைவாகத் திருமணம் நடப்பதில் பங்குண்டு. உதாரணமாக, ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தின் அதிபதியாக வரும் கிரகமும், இரண்டாமிடம் என்னும் குடும்பஸ்தானத்தின் அதிபதியாக அமைந்த கிரகமும் வலிமையாக சொந்த வீடுகளில் இருப்பது, ஆட்சி, உச்சம் பெறுவது அல்லது சுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை ஐந்தாமிடம் அல்லது ஒன்பதாமிடம் ஆகியவற்றில் இருப்பது போன்ற அமைப்பு ஜாதகத்தில் இருக்கப் பிறந்த ஜாதகருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதுடன், இனிமையான குடும்ப வாழ்க்கையும் அமையுமென்று ஜோதிடம் கூறுகிறது.

 

இவ்வாறே திருமண பாக்கியத்தை ஒருவருக்கு அளிப்பதில் குரு பகவானின் அருளும் அவசியம். ‘குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தி' என்று சொல்வதிலிருந்தே வியாழன் என்னும் குரு பகவானின் சிறப்பை அறியலாம். இத்தகைய குரு பகவான் சேர்க்கை, பார்வை ஏழாமிடம் மற்றும் இரண்டாமிடத்தின் அதிபதிகளுக்கு இருக்குமானால் அவர்களுக்குத் திருமணம் அதிக சிரமமில்லாமலே நடைபெறும் என்று கூறலாம்.

 

சிலருக்கு ஏதோ காரணத்தினால் இரண்டாவது திருமணம் அமைவதும் உண்டு. பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானமும், இரண்டாமிடமும் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது மேற்கூறிய இடங்களுக்குப் பாவிகளின் சேர்க்கை அல்லது பார்வை அல்லது மேற்கூறிய இடங்களின் அதிபதிகளுக்கு பாவ சேர்க்கை அல்லது சம்பந்தம் இருக்குமானால் இரண்டாம் திருமணம் ஏற்படும். மேற்கூறிய இரண்டாமிடம், ஏழாமிடம் ஒன்றில் பாதிப்பு காணப்பட்டாலும் இரண்டாம் திருமணம் உண்டு எனலாம்.

 

இக்காலத்தில் விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்வது ஆண் - பெண் இருவருக்குமே இயல்பான ஒன்றாகிவிட்டது. இது நியாயமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருந்தாலும் பொதுவாக திருமண முறிவு, மண வாழ்க்கையில் பிரச்சினை, தாம்பத்திய சுகம் பெறுவதில் குறைபாடு, அதிருப்தி, மறுமணம் செய்யும் நிலை உண்டாவது, அப்படியே மறுமணம் செய்தாலும் அதிலும் ஏதாவது ஒரு குறை, மறுமணம் அமைவதில் தடை, தாமதம் இதற்கெல்லாம் அவரவர் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாக ஏற்பட்ட களத்திர சாபமோ, ஸ்திரீ சாபமோ பின்னணியில் இருப்பதை அறியலாம். மந்திர சாஸ்திர ரீதியான பரிகாரங்களை உரிய முறையில் செய்து நிவாரணம் பெறலாம்.

 

‘ஒரு வழியாகத் திருமணம் தான் நமக்கு முடிந்துவிட்டதே. இனி எல்லாம் சுபமே' என்று சிலருக்கு இருக்காது. கணவன் - மனைவிக்குள் எப்போதும் சண்டை, சச்சரவு, கோபதாபங்கள் - இதனால் நிம்மதியில்லாமல் போவது, பொருளாதாரச் சிக்கல்கள், நிச்சயமில்லாத, அமைதியில்லாத சூழ்நிலை இதன் காரணமாக குடும்பத்தில் பிரிவு போன்றவை காணப்படும். இதற்கு கரும்பாம்பு எனப்படும் ராகு, செம்பாம்பாம் கேது மற்றும் கர்மகாரகன் சனி ஆகிய மூவரும் ஏதோ ஒருவகையில் இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதே காரணம்.

 

சிலருக்கு அதிகாரம் செலுத்தும் மனைவி அமைந்து, ஜாதகர் அடங்கிப் போகும்படியாக இருக்கும். ஜாதகர் உள்ளுக்குள்ளேயே மனம் புழுங்கி, வெளியில் வேதனைகளை சந்திக்கும்படி இருக்கும். இவர் என்னதான் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும், வீட்டில் மனைவிக்கு முன் பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டியிருக்கும். இதற்கு லக்னாதிபதியை விட ஏழாமதிபதி வலிமை பெற்றவராக இருப்பதைக் காணலாம்.

 

வாழ்க்கை என்பது விசித்திரம் நிறைந்தது. கேட்பவர்க்குக் கிடைக்காது; கேட்காதவருக்கு கிடைக்கும். சிலருக்கு கேட்டதை விட அதிகமாகவும், சிலருக்கு கேட்டதற்கு எதிர்மாறாகவும், எங்கோ வெகு சிலருக்கே கேட்டபடியே கிடைத்ததாகவும் வாழ்க்கை அமைகிறது. இதற்கு அவரவர் வினைப்பயனே காரணமென்று கூறிய முன்னோர்கள், எதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிய ஜோதிட சாஸ்திரத்தையும், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற உரிய பரிகாரங்களை அறிய மந்திர சாஸ்திரத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தினாலே திருமணம், குடும்பம், தொழில், கல்வி, உத்தியோகம், வெளியில் சொல்ல முடியாத அந்தரங்கப் பிரச்சினைகளுக்கும் விடைகண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ளலாம்.


- வி. விஜயராகவன்

 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.