Skip to main content

உடல் - கோவில் அமைப்பு இரண்டும் ஒன்றா ?

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

உடலியல் கூறுகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஆலயமானது, அது அமைக்கப்பட்டிருக்கும் முறையில் சில அர்த்தங்களைச் சொல்கிறது. ஆலய வெளிப்புற மதில் சுவர் தொடங்கி கர்ப்பக்கிரகம் வரையிலான ஒவ்வொரு நிலையும் ஒரு அர்த்தத்தைச் சொல்லி, இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. அவற்றையெல்லாம் அறியாத நிலையில், நம் மனச்சுமைகளைக் கொட்டிச்செல்லும் கூடாரமாய் ஆலயங்களை எண்ணிக்கொண்டு நிம்மதிதேடி வந்துபோகிறோம். ஆலயம் சொல்லும் செய்தியைத் தெரிந்தும் உணர்ந்தும் வழிபடாதவரை அங்கிருந்து நிம்மதி மட்டுமல்ல; எதுவுமே கிடைக்காது என்பதே நிதர்சனம்.ஆலயத்திற்கு வந்ததும் முதலில் அதைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் பெரிய மதில் சுவர் வரவேற்கும். நம் வீட்டைச் சுற்றிலும் வேலியுண்டு. ஆலயத்தைச் சுற்றிலும் வேலியுண்டு. ஒன்று நம் ஆசையின் அடையாளம்; மற்றொன்று பற்றற்று இருத்தலின் அடையாளம். இன்னும் எளிமையாகச் சொன்னால், வீட்டு வேலி ஜீவாத்மாவின் பலவீனம். ஆலய வேலி ஜீவாத்மாவின் பலம்! ஆசைகள், பந்த பாசங்களிலிருந்து விலகி இறைவனை நாடிவந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதன் அடையாளமாக, ஆலயத்தைத் தனித்துக் காட்டும் படியாக அதைச்சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

meenakshiamman temple

வெளிப்புற மதில் சுவரில் வெளிக்கோபுரம் இருக்கும். இறைவனின் திருவடி அடையாளமாகத் திகழும் வெளிக்கோபுரத்தில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள் என எல்லாம் சிற்ப வடிவில் இடம்பெற்றிருக்கும். இது பிரபஞ்சம் முழுமையும் இறைவனிடம் அடக்கம் என்பதன் அடையாளம். பிரபஞ்சத் தையே தன் காலடியில் வைத்திருக்கின்ற இறைவனின் வீடான ஆலயத்திற்குள் வரும்போது, செருப் போடு சிற்றின்ப ஆசைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் வெளிக்கோபுரத்தில் விரச வடிவிலும் பொம்மைகள் இடம்பெற்றிருக்கின்றன.வெளிக்கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, பதினொன்று என ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஒன்றின்மேல் ஒன்றாகப் பெருகிக்கொண்டே போகும். அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தங்கள் உண்டு. மூன்று வாசல்கள் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளையும்; ஐந்து வாசல்கள் ஐம்பொறிகளையும்; ஏழு வாசல்கள் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவற்றையும்; ஒன்பது வாசல்கள்- மேற்சொன்ன ஏழுடன் சித்தம், அகங்காரம் ஆகியவற்றையும் குறிக்கும். இத்தனை வாசல்கள் இருந்தும் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தரைமட்டத்திலுள்ள ஒரு வாசல் மட்டுமே உதவுகிறது. மற்ற வாசல்கள் இருந்தும் பயன்படாததைப்போல, அக, புறக்கரணங்கள் (வழிகள்) பல நம்மிடம் இருந்தாலும், இறைவனை நாடிச்செல்ல "மனம்' என்னும் கரணம் மட்டுமே பயன்படும். எனவே மற்ற கரணங்களை இருக்கும் தன்மையிலேயே விட்டுவிட்டு, மனதின் உதவி யோடு மட்டுமே இறைவனை நோக்கி உள்முகமாகச் செல்லவேண்டும் என்பதே வெளிக் கோபுரத்தின் தத்துவம்.

இறைவனை நோக்கி வருவதற்கு மட்டு மல்லாது, எப்பொழுதும் இறைவனை நோக்கிய மனம் இருந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதை உணர்த்துவதற்காகவே ஜீவாத்மாவின் அடையாளமாகிய தெய்வ வாகனங்கள் இறைவனை நோக்கியபடி அமர்ந்திருக்கும்.இவற்றைக் கடந்தால் வெளிப்பிராகாரம், உள் பிராகாரம், அதனுள் உள்ள பிராகாரம் என மூன்று பிராகாரங்கள் இருக்கும். ஆசைகள், பந்த பாசங்கள், சிற்றின்பங்களை வெளியே விட்டுவிட்டு வந்ததைப்போல உலகப்பற்றையும் படிப்படியாக விடப் பழக வேண்டும் என்பதன் அடையாளம் இந்தப் பிராகாரங்கள். இதேபோல கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள ஐந்து பிராகாரங்கள், நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கி பக்தி செலுத்தவேண்டும் என்பதன் அடையாளமாகும். உலகப்பற்றைப் படிப் படியாக விடவும், ஐம்புலன்களை அடக்கி பக்தி செலுத்தவும் பழகிவிட்டால், இறைவனின் சந்நிதானமான கர்ப்பக்கிரகத்தை எளிதில் அடையலாம் என்பதாலயே கர்ப்பக்கிரகத்தின் முன்னும், அதைச் சுற்றிலும் பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

golden temple

ஆலயம் முழுக்க ஆயிரம் விளக்குகளை அமைத்தாலும், கர்ப்பக்கிரகத்திற்குள் மட்டும் எந்தவித மின் விளக்குகளும் அமைக்கப்படுவதில்லை. ஜன்னல்களோ, இடைவெளிகளோ, கிராதிகளோ வைக்காமல், உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வாசல் மட்டுமே வைத்து கர்ப்பக்கிரகத்தை அமைத்திருப்பார்கள். இது இறைவனை நாம் நாடிச்செல்வதற்கான ஒரே கரணம் மனம் மட்டுமே என்பதன் அடையாளமே. அந்த மனதை ஆத்மா குடியிருக்கும் உள்ளத்தை நோக்கித் திருப்பினால் அங்கே காரிருள்தான் தெரியும். அதனாலயே உள்ளத்தைக் குறிக்கக்கூடிய கர்ப்பக்கிரகம் வெளிச்சமில்லாமல் இருட்டாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிச்சமாக இருக்கும்போது மனதை இறைவனை நோக்கி உள்முகமாக வைத்திருப்பது கடினம்.கவனமும் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டையைப்போல சிதறி ஓடும். ஆனால் அது இருளாக இருக்கும்போது சாத்தியம். அப்படித் தொடர்ந்து உள்நோக்கியே வைத்திருக்கப் பழகிவிட்டால், ஆலய வழிபாட்டின்போது தீபாராதனைமூலம் இறைவன் காட்சி தருவதற்குமுன் எப்படி மணியோசை கேட்கிறதோ, அப்படியான ஒருவித மணி யோசையை நமக்குள்ளேயே கேட்கமுடியும். அப்படிக் கேட்கக்கூடிய ஓசையை "ஞானம்' என்றும், அதைக் கேட்டவர்களை "ஞானிகள்' என்றும் அழைத்தனர். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஞானம் உணரும் ஞானிகளாய் எல்லாராலும் இருக்கமுடியாது என்பதாலயே, இறைவன் தன்னையடையும் இன்னொரு மார்க்கத்தை கர்ப்பக்கிரகத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று படிகள்மூலம் உணர்த்துகிறான். பெரும்பாலும் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் மூன்று படிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இது ஆசை, ஆணவம், அகங்காரம் என்ற மூன்று அஞ்ஞானத்தைக் குறிக்கும். இம்மூன்றையும் நீக்கிவிட்டுத் தன்னை நோக்கி வருபவன் தன்னையடையும் தகுதி பெற்றவனாகிவிடுவான் என்பதை பக்தர்களுக்கு எளிமையாக உணர்த்துவதன் அடையாளமே மூன்று படிகள். படிகளின் தத்துவம் உணர்ந்தால் பரமாத்மாவை நெருங்கலாம்.


எழுதியவர் : கோபி சரபோஜி