Skip to main content

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

youth who was swept away by river was recovered

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் 22 வயது சரண்ராஜ். பட்டதாரி இளைஞரான இவர் தனது நண்பர்களான கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன், மணிகண்டன், சந்துரு, ஸ்ரீபதி ஆகியோருடன் நேற்று முன்தினம் சோமண்டார்குடி என்ற ஊர் அருகே கோமதி ஆற்றில் வலை போட்டு மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன் கிடைக்கவில்லை. அதனால்  நண்பர்களுடன் வீட்டுக்குக் கிளம்பத் தயாராக இருந்தனர்.

 

அந்த நேரத்தில் கல்வராயன் மலை ஒட்டியுள்ள கோமுகி அணையின் உபரி நீர் 3000 கன அடி திறந்து விடப்பட்டது. இவர்கள் ஆற்றிலிருந்து வெளியேறத் தொடங்கிய நேரத்தில் வெள்ள நீரின் வேகம் அதிகரித்து இருக்கிறது. இதில் அவரது நண்பர்கள் கரையேறி விட சரண்ராஜ்  மட்டும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். 

 

இதையடுத்து கரையேறிய இளைஞர்கள் கச்சராபாளையம் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்  சரண்ராஜை தேடினர். இதனிடையே உடனடியாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினருக்குத் தகவல் அளிக்க, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை தேடும் பணியில் இறங்கினர். 

 

இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு மூன்றாவது நாளான இன்று வன்னஞ்சூர் கிராமத்தின் அருகே இளைஞர் சரண்ராஜ் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை போலீசார் உடனடியாக பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோமதி ஆற்று வெள்ளத்தில் இளைஞர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்