அரியலூர் அருகே மாமனார் செருப்பால் அடித்துத் தாக்கியதாகவும், தொடர்ந்து குடும்ப வன்முறையை நிகழ்த்தியதாகவும் கூறி பெண் ஒருவர் தன் உடலில் தீ வைத்துத் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பரபரப்பாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார்வெட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் பிரகாஷ் மற்றும் அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். அபிராமி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தையைக் கண்டித்துள்ளார்.
இதனைப் பார்த்த அபிராமியின் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய இருவரும் அபிராமியைத் திட்டி உள்ளனர். மேலும் அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷும் திட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடலில் தீ வைத்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அபிராமி தஞ்சை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் ஏற்பட்ட தகராற்றில் தன்னை மாமனார் கலியமூர்த்தி செருப்பால் அடித்து மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றியதாக அபிராமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையிலிருந்தவாறே வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கலியமூர்த்தியைக் கைது செய்தனர். மேலும் அபிராமி தற்கொலைக்கு முயன்றாரா அல்லது மாமனார் கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.