Skip to main content

"அதிமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்" - வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யும் சீர்மரபினர் நலச்சங்கம்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

We are campaigning not to vote for the AIADMK


1978ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல, தமிழகத்தில் உள்ள 68 சமுதாய மக்களை பழங்குடியின சீர்மரபினர் (DNT) என அறிவிக்க, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இதனை, சீர்மரபினர் நலச்சங்கம் கையில் எடுத்து, போராட்டங்கள் மூலம் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

 

கடந்த 2019ஆம் ஆண்டு, DNC சான்றிதழ் மூலம் தமிழக அரசின் சலுகைகளையும், DNT சான்றிதழ் மூலம் மத்திய அரசின் சலுகைகளும் சீர்மரபின சமுதாய மக்கள் பெறலாம் எனத் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. இந்த இரட்டைச் சான்றிதழ் முறையை எதிர்த்துவந்த சீர்மரபினர் நலச்சங்கம், DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் முறைக்கான ஆணை வழங்க தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

 

சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இடஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் தற்காலிகமானது என்றும், 6 மாதங்களுக்குப் பின், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியபின், தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

 

இந்த நிலையில், வன்னியர் சமூகத்துக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும்போது, சீர்மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீட்டையும் அறிவித்தது தமிழக அரசு. இந்நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும், அ.தி.மு.க அரசு தங்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் கூறி, சீர்மரபினர் நலச்சங்கத்தினர், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி, அ.தி.மு.க-வுக்கு வரும் தேர்தலில் ஓட்டுப் போடக்கூடாது எனப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி கிராமத்தில் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.

 

இது சம்மந்தமாக சீர்மரபினர் நலச்சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, “கடந்த 6 வருட காலமாக, DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் எனப் பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். அ.தி.மு.க அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. 7% உள் இடஒதுக்கீடு எனக் கூறி, 68 சமுதாய மக்களையும் ஏமாற்றியிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் கொடுக்கப்பட்டு, மத்திய அரசின் சலுகைகளைப் பெறும்போது, தமிழக அரசு மட்டும் எங்களை வஞ்சிக்கும் விதமாக நடந்துகொள்கிறது. அதனால்தான், எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் கறுப்புக் கொடி கட்டியிருக்கிறோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வைப் புறக்கணிக்க, 68 சமுதாய மக்களும் தயாராகி வருகிறோம். வீடுவீடாகச் சென்று அ.தி.மு.க.விற்கு வாக்களிக்காதீர்கள் எனப் பிரசாரம் செய்துவருகிறோம். தென் மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடையும்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.