Skip to main content

இழப்பீடு வழங்காததால் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

villupuram district collector office court order

 

விழுப்புரம் நகரை ஒட்டியுள்ளது கிழக்கு சண்முகாபுரம் காலனி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகம். இவர் நகரின் விரிவாக்க பகுதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கு சொந்தமான கிழக்கு புதுச்சேரி சாலை அருகில் ஆறு ஏக்கர் 75 சென்ட் நிலத்தை, கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழக அரசு நில ஆர்ஜித சட்டத்தின்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு வழங்கியுளளார்.

 

இதில் சண்முகத்தின் மகன் சிவானந்தம் என்பவருக்கு சேர வேண்டிய ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்திற்கு, ஒரு சதுர அடிக்கு எட்டு ரூபாய் பத்து பைசா என்று இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 332 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த தொகை அப்போதைய சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி சிவானந்தம் விழுப்புரம் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு, சதுர அடிக்கு 500 ரூபாய் எனக் கணக்கிட்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட 1991ஆம் ஆண்டு முதல் அதற்கான வட்டியுடன் சேர்த்து மொத்த இழப்பீட்டுத் தொகையாக 39 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 337 வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அப்போது முதல் சிவானந்தத்திற்கு இழப்பீடு தொகை வழங்காமல், மாவட்ட ஆட்சியர் வீட்டு வசதி வாரிய அலுவலர் மற்றும் அதிகாரிகள் காலதாமதம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து மனுதாரர் முருகானந்தம் நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து அவருக்குரிய இழப்பீட்டுத் தொகையை மூன்று மாதத்திற்குள் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்த தொகையை வழங்க மீண்டும் காலதாமதம் ஆகியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகங்கள் ஆகியவற்றில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நீதிபதி மோனிகா உத்தரவிட்டுள்ளார். உத்தரவையடுத்து நேற்று (07/04/2021) காலை 11.00 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.

 

அவர்களைப் பார்த்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளையும் வரவழைத்து மூன்று தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீட்டுத் தொகை வழங்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கு மூன்று தரப்பும் ஒப்புக்கொண்டதால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டுச் சென்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.