Skip to main content

மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரிக்கு மிரட்டல்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Sand sss



கடல்மணலை கொள்ளை அடித்த கும்பலை தடுத்த அரசு பெண் அதிகாரியை முற்றுகையிட்டு கொலை மிரட்டல் விடுத்த மணல் கொள்ளையர்களை அடித்து உதைத்து காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.
 

நாகப்பட்டினத்திற்கு அடுத்த நாகூர் கடற்கரையில் கடல் மணலையும் குறிவைத்து கொள்ளையடிக்கிறார்கள் என கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து  தொடர்ந்து புகார் சென்றிருக்கிறது. இந்நிலையில் ஜே.சி.பி. இயந்திரத்தைக்கொண்டு டிராக்டர்கள் மூலம் நாகூர் கடற்கரையில் மணல் எடுப்பதாக இன்று அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். 
 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கனிமவளத்துறை அதிகாரிகள் மணல் ஏற்றிவந்த 3 டிராக்டர்களை மடக்கி பிடித்தனர். கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணல் கடத்திய கும்பல், மறித்த அதிகாரியை மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்த அதிகாரி அவர்களை மீண்டும் விரட்டி மடக்கி பிடித்தார். பிடிபட்ட மணல் கடத்தல் கும்பல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
 

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் கடல் மணலை ஏற்றி வந்த கும்பலை அடித்து உதைத்து கைது செய்தனர். மணல் ஏற்றிவந்த வாகனங்களை காவல்நிலையம் கொண்டுவர அந்த கும்பல் ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் காவல்துறையினரே வாகனங்களை பறிமுதல் செய்து ஓட்டி வந்தனர். 
 

இது குறித்து காக்கிகள் கூறுகையில், "கடல் மணலை ஆற்றுமணல் எனக்கூறி விற்கின்றனர்.  கடல் மணலோடு நிலத்தடி மணலை கலப்படம் செய்து ஆற்றுமணல் என அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மணல் தட்டுப்பாட்டை சாதகமாக்கிக்கொண்ட மணல் மாஃபியாக்கள் அதிகாரிகளின் உதவியோடு நிலத்தடி மனதை கொள்ளையடித்து வருகின்றனர்.  பிறகு  ஆறுகள், குளங்களில் உள்ள மணலை கொள்ளையடித்தனர். சமீபகாலமாக மணல் கடத்தலில் மணல் மாஃபியாக்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் ஆரம்பத்தில் லாரிகள் மூலமும் பிறகு டிராக்டர் மாட்டுவண்டி மூலமும் அதன் பிறகு டாடா ஏஸ், டூவீலர் என மணலை கடத்திவந்தார்கள். சமீப காலமாக ஆறுகளில் தண்ணீர் வந்ததால் படகுகள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மிஞ்சும் வகையில் கடலோரத்தில் இருக்கின்ற கடல் மணலை இயந்திரம் மூலம் அள்ளி வந்து இதுதான் ஆற்று மணல் என அப்பாவி மக்களிடம் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்தும் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாததுமாக இருந்து விடுகின்றனர். இந்த நிலையில் இன்று நாகூரில் பிடிபட்டுள்ளனர் என்றனர்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மணல் தேவையை பூர்த்தி செய்ய என்எல்சி நிறுவனம் புதிய திட்டம் தொடக்கம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 NLC Company launches new project to meet sand demand

நெய்வேலியில் உள்ள சுரங்கம்-1 அ பகுதியில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுப்பதற்காக நீக்கப்படும் மேல் மண்ணிலிருந்து, ‘எம்-சாண்ட்’ (M-Sand) எனப்படும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் மணல் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான பூமி பூஜை, நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவரும் மற்றும் மேலாண் இயக்குநருமான பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கி பணியை துவக்கி வைத்தார்.

நிலக்கரி அமைச்சகத்தின் பசுமை முன் முயற்சிகளுக்கு இணங்க, இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும், சுற்றுச்சூழல் மற்றும் நதி சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காகவும், “கழிவிலிருந்து வளம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்திட இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இது போன்ற, பசுமை முயற்சிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆலையானது, சுரங்கத்தில், மேல்மண் நீக்கத்தில் இருந்து பெறப்படும் மண்ணில் இருந்து, ஆண்டுக்கு 2.62 லட்சம் கன மீட்டர், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் தரமான ‘எம்சாண்ட்’ என்ற மணலை உற்பத்தி செய்யும். மேலும், வருகின்ற 2024 ஜனவரி மாத இறுதிக்குள் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், தற்போதைய அதிகபட்ச மணல் தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், இயற்கை வளமான மணல், அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுவது குறையும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள இதர சுரங்கங்களான, சுரங்கம்-1 மற்றும் சுரங்கம்-2 ஆகியவற்றிலும் இதே போன்று மற்றும் இதைவிட அதிகத் திறன் கொண்ட மணல் ஆலைகள், விரைவில் நிறுவப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத் தலைவர், இந்த ஆலையை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்றும், இது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், பசுமை முயற்சிகள் வருங்காலங்களில், நிறுவனத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், நிறுவனத் தலைவர் அவர்களுடன் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், செயல் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story

மணல் லாரிகளை எம்.எல்.ஏ மிரட்டுகிறார்; மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Truck Owners Association President alleges that MLA  threatening sand trucks

 

வேலூர் மாவட்டம் கந்தநேரியில் உள்ள அரசு மணல் கிடங்கில் இருக்கும் ஆற்று மணலை முறையாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட லாரிகளுக்கு 3 தினங்களுக்கு மேலாக மணல் கொடுக்காமல் காத்துக் கிடக்க வைத்துவிட்டு, மணல் எடுக்க பதிவு செய்யாத லாரிகளுக்கு இரவு பகலாக கள்ளத்தனமாக அரசு அதிகாரிகளின் துணையோடு, லோடு லோடாக மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து முறையாகப் பதிவு செய்த லாரிகளுக்கு மணல் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தனர்.

 

Truck Owners Association alleges that MLA  threatening sand trucks

 

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் நிலவி வரும் ஆற்று மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்டு வேலூர் கந்தனேரி மணல் குவாரியில் திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும், ஒன்றிய கவுன்சிலரும் சேர்ந்து உள்ளூர் ரவுடிகளை வைத்துக் கொண்டும் அரசு அதிகாரிகளோடு கைகோர்த்துக் கொண்டும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த லாரிகள் வாரக்கணக்கில் நின்று கொண்டிருக்க, இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அனுமதி பெறாத லாரிகளில் டன் கணக்கில் மணல் கடத்துகிறார்கள். 

 

ஆகவே இதுபோன்று அநீதி இழைப்பதை தடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் பதிவு செய்து மணல் எடுக்க காத்துக் கொண்டிருக்கும் லாரிகளுக்கு காவல்துறை முன்னிலையில் மணல் வழங்கிட வேண்டும். அதேபோன்று மணல் கடத்தலில் ஈடுபடும் உள்ளூர் குண்டர்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கிடங்கில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.