
கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணி மற்றும் ராம்குமார். அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இவர்கள் நேற்று இரவு வழக்கம்போல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
மணியின் வீட்டில் இருந்த மர ஜன்னலை ஒருபுறம் அறுத்து பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்து பிரோவில் இருந்த 74 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றனர். மணி என்பவரின் மகன் கடந்த ஒரு மாததிற்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து திருமணம் செய்வதற்காக சொந்த ஊரான ஆலம்பாடி வந்துள்ளார். இவர் திருமணத்திற்காக தங்க நகைகள் மற்றும் ரொக்கம் வீட்டில் வைத்திருந்தாக கூறப்படுகிறது.
இதேபோல் ராம்குமார் வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த பீரோவை வயலுக்கு எடுத்துச் சென்று அதில் இருந்த 37 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். மேலும் மற்றொரு அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதிலிருந்த வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். இருவரது வீடுகளிலும் இருந்து மொத்தம் 111 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் ரூ.7 லட்சம் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மற்றும் ராமநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.