
நிலவிவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் தட்டார்மடம் வாலிபர் செல்வன் கடந்த மாதம் 17ம் தேதி மர்ம கும்பலால் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அ.தி.மு.க.வின் வர்த்தக அணிச் செயலாளர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துக்கிருஷ்ணன், சின்னத்துரை முத்துராமலிங்கம் ஆகியோர் மீது கொலை வழக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சின்னத்துரை முத்துராமலிங்ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், இருவரும் சென்னை சைதாப் பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.
இதனிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் டி.ஜி.பி.திரிபாதி ஒப்படைத்தார். சென்னையில் சரணடைந்தவர்களை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களைப் பேரூரணி சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த இவர்களை 8 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதிகோரி கேவில்பட்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி.யான அனில்குமார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜராகும் பொருட்டு நான்கு பேர்களும் பாதுகாப்பாக நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அனுமதியளித்தார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவலில் எடுக்கப்பட்டவர்களிடம் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தனது அலைபேசியில், கைதான திருமணவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோரிடம் எத்தனை முறை பேசியுள்ளார் என்ற விபரங்களை ட்ரேஸ் செய்யும் பணியிலிருக்கின்றனராம் சி.பி.சி.ஐ.டி.யினர்.
அதனைக் கொண்டு இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்படுவதுடன் செல்வன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் மட்டுமின்றி எஸ்.ஐ.க்கள் போலீசாருக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிகிறது. சி.பி.சி.ஐ.டி.யினரின் பிடி இறுகுகிறது.