Skip to main content

தேர்தல் வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம்! சேலத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நம்பிக்கை!!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அதை கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

 

dmk

 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். இந்தமுறை கூட்டணி அமைப்பதிலும், கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என எல்லாவற்றிலும் ஆரம்பத்தில் இருந்தே திமுக  படு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. 

 

 

ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 17) மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 23 மணி நேரத்திற்குள்ளாகவே, சேலம் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தையும் ஜெட் வேகத்தில் நடத்தி முடித்திருக்கிறது திமுக. சேலத்தில் திங்கள்கிழமை (மார்ச் 18, 2019) மாலையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்து, எஸ்.ஆர்.பார்த்திபனை அறிமுகப்படுத்தினார். 

 

dmk

 

முக்கிய தோழமைக் கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ, மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கச் செய்திருந்தது, சேலம் மத்திய மாவட்ட திமுக. மிகக்குறுகிய காலத்தில் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து முடித்ததோடு, கூட்டம் நடந்த திருமண மண்டபத்தில் அமர இடம் போதாத அளவுக்கு கூட்டத்தையும் திரட்டி இருந்தார் எல்எல்ஏ ராஜேந்திரன். கூட்டணி கட்சி நிர்வாகிகள் எல்லோருமே திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி அளித்தார்கள். அதே மேடையில் இக்கூட்டத்திற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்தும் சிலாகித்து பேசினார்கள்.

 

 

திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசுகையில், ''தமிழ்நாட்டில் நடப்பது ஒரு கேடுகெட்ட ஆட்சி. பாஜகவும், மக்கள் விரோத ஆட்சியைத்தான் நடத்தியது. 480 ரூபாய்க்கு விற்ற காஸ் சிலிண்டர், இன்றைக்கு 1050 ரூபாயாக உயர்ந்து விட்டது. நீட் தேர்வைக் கொண்டு வந்து, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை முடக்கி  விட்டது பாஜக. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏராளமான சிறு,குறு தொழில்கள் அடியோடு முடங்கி விட்டன. இப்படி எல்லா வகையிலும் நாட்டையே குட்டிச்சுவராக்கிவிட்ட பாஜக எப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும்?

 

dmk

 

சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு சொந்த மாவட்டம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று நம் கட்சிக்காரர்கள் கூட சிலர் இங்கே பேசினார்கள். ஒருமுறை பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு 5000 ரூபாய் பணம் கொடுத்தார். ஆனாலும் அவர் அந்த தொகுதியில் தோற்றுப்போனார். அதுபோலதான் இப்போதும் நடக்கப் போகிறது. எடப்பாடி அரசை தூக்கி எறிய வேண்டும் என்று எப்போதோ முடிவு செய்துவிட்டார்கள்.  

 

 

அதிமுக வைத்திருப்பதெல்லாம் மெகா கூட்டணியா? அந்த கூட்டணியில் ஒரு கட்சியின் பொறுப்பாளராக உள்ள ஒருவர், மணப்பெண் என்றால் பத்து பேர் வந்து பெண் கேட்கத்தான் செய்வார்கள் என்கிறார். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு மணப்பெண் பத்து வீட்டுக்குப் போய், என்னை கல்யாணம் செய்து கொள் என்று கெஞ் சுவதுதான் கேவலம். அதைத்தான் அந்த பெண்மணி செய்தார்.

 

 

கடந்த தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று சொல்லி போட்டியிட்ட பாமகவால் 5.4 சதவீத ஓட்டுகள்தான் பெற முடிந்தது. அதிமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு அவர்களிடமே கூட்டணிக்காக கைகுலுக்கி, தரக்குறைவான கேடுகெட்ட செயலைச் செய்கின்றனர். மக்கள் அவர்களை நிர £கரிப்பார்கள். 

 

 

ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு தமிழகத்தில் திமுக&காங்கிரஸ் கூட்டணி அலை இருப்பதாக உளவுத்துறை சொல்கிறது. நிச்சயம் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். 2011 சட்டமன்ற தேர்தலின்போது நான் ஒரு ரூபாய்கூட காசு செலவழிக்காமல்தான் வெற்றி பெற்றேன். ஆனால், என்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக தலைவர் ஜி.கே.மணி, ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் கொடுத்தும் தோற்றார். அதுதான் இப்போதும் நடக்கப் போகிறது. ஸ்டாலின்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

 

 

மேட்டூர் எம்எல்ஏவாக இருந்தபோது மக்கள் நலனுக்காக 54 போராட்டங்களை நடத்தினேன். அதில் 50 போராட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறேன். பட்டா மாறுதலுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினேன். பிச்சை மூலம் கிடைத்த 3 லட்சம் ரூபாயை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், அதை அப்போதைய கலெக்டர் மகரபூஷணத்திடம் கொடுப்பதற்காகச் செல்ல இருந்தேன். இதையறிந்த கலெக்டர் என்னை தொடர்பு கொண்டு, எல்லோருக்கும் பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறினார். அப்படி ஒரு நாளில் 3000 பேருக்கு இலவசமாக பட்டா மாறுதல் பெற்றுக் கொடுத்தேன்.

 

 

திமுக தலைவர் கலைஞர் மறைந்தபோது, அவருடைய உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா சமாதி அருகே இடம் இல்லை என்று மறுத்தவர்தான் எடப்பாடி. அண்ணாவுக்கு அருகில் இடமில்லை என்ற எடப்பாடிக்கு சேலத்திலும் இடமில்லை என்று இந்த தேர்தலில் மக்கள் சொல்வார்கள். மக்களவை தேர்தலில் சேலம் மட்டுமின்றி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றியை நாம் கலைஞரின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.

 

 

தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திரகுமார், கந்தசாமி, திமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், கலையமுதன், ஜி.கே.சுபாசு, கார்த்திகேயன், தாமரை கண்ணன், லதா சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.