
ஈரோடு மாவட்டம், கணபதிபாளையம், தோப்புக்காடு பகுதி சேர்ந்தவர் மூர்த்தி (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதிமணி. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். மூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மூர்த்திக்கு வலது காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, முழங்காலுக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்டு விட்டது. இதனால் அவர் இடது கால் மூலமாக மட்டும் மெதுவாக நடப்பார். இதன் காரணமாக அவருக்கு கால் வலி அதிகமாக இருப்பதாகவும் கூறி வந்துள்ளார். மேலும், ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக அவரை சந்திக்க வருபவர்களிடம் மது வாங்கி வரச் சொல்லி, வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அதிகமாக மது குடித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி மதியம், தன்னால் கால் வலி தாங்க முடிய வில்லை என்றும், அதே நேரம் மது குடிக்காமல் இருக்க முடியவில்லை என்றும், அதனால் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்து விட்டதாகவும் தனது மனைவியிடம், மூர்த்தி கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து, மலையம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.