தர்மபுரி மாவட்டம், அதியான்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, கால் முறிந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதியமான்கோட்டை கலெக்டர் பங்களா அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவர் நேற்று இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில், அவருக்கு கால் முறிந்து, உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதனை அறிந்து விடுதியில் இருந்தவர்கள் அந்த மாணவியை மீட்டு தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார்.
தனியார் பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் நடத்தும் மாதாந்திர கூட்டம் நடைபெற்று முடிந்து நிலையில், நேற்று கணித தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த மாணவி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். மாணவியிடம் போலீசார் தீவிரமாக ரகசிய விசாரணை மேற்கொண்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தனியார் பள்ளி நிர்வாகத்திடமும் பணியில் இருந்த ஊழியர்களிடமும் அதியமான் கோட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.