Skip to main content

நீதிமன்ற அவமதிப்பு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019

 


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தங்கவேலை மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம், வியாழக்கிழமை (பிப். 28) உத்தரவிட்டுள்ளது.


சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலையில் பொருளாதாரத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

vb


இவர் தனக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்க மறுப்பதாக பெரியார் பல்கலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு ஏற்ப, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.  ஆனால் பல்கலை நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதுகுறித்து வைத்தியநாதன் பல்கலை பதிவாளருக்கு பலமுறை கடிதம் எழுதினார். அதற்கும் பல்கலை நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.

 

r


இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக பல்கலை பதிவாளர் தங்கவேல் மீது உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வைத்தியநாதன் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு, வியாழக்கிழமை (பிப். 28) நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜோதிமணி ஆஜராகி வாதாடினார். 


வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாகக்கூறி, பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேலை வரும் மார்ச் 28ம் தேதிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.   உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்