உடல்நலக்குறைவால் இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். திரையுலகினர் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்கு இன்று மாலை சென்னையில் 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் சிகிச்சை பலனின்றி இயக்குனர் மகேந்திரன் காலமானார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரின் வயது 79.

சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதின்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்,

மிக மிக நெருங்கிய நண்பர், எங்களுடைய நட்பு சினிமாவை தாண்டி இருந்தது. ரொம்ப ஆழமான நட்பு..எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருக்கிறார் என்று எனக்கே காட்டியவர். புதிய நடிப்பு பரிமாணத்தை சொல்லிக்கொடுத்தவர். முள்ளும் மலரும் பார்த்தபிறகு இயக்குனர் பாலச்சந்தர் உன்னை நான் அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன் என கடிதம் எழுதினார். அந்த பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரன் சார். அண்மையில் பேட்ட படத்தில் சேர்ந்து பணியாற்றும்போது சூட்டிங்கில் நிறைய பேசிக்கொண்டோம். இப்போ இருக்க சமுதாயத்தின் மேலேயும், சினிமா மேலேயும் அரசியல் மேலேயும் அவர் கொண்டிருந்த அதிருப்தி கோவம் எல்லாத்தையும் என்னிடம் வெளிப்படுத்தினார்.
அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால், அவர் எக்காரணத்தை கொண்டும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி மத்தவங்களுக்காகக் சுயமரியாதையை சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காத மனிதனர். இப்பொழுது வரும் இயக்குனர்களுக்கு கூட அவர் முன்மாதிரியாக இருக்கிறார். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு. அவர் குடுப்பதாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.
முன்னதாக நடிகை ரேவதி, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா, சின்னி ஜெயந்த், மோகன், ராதிகா,இயக்குனர் சிம்பு தேவன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதது அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.