Skip to main content

எலுமிச்சம்பழம் விலை கடும் சரிவு!

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

price of lemon has fallen sharply

 

தக்காளி, சின்ன வெங்காயம் விலை ஏறிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதே தக்காளி, வெங்காயத்தை விற்க முடியாமல் வீதியில் கொட்டிய விவசாயிகளுக்கு ஈடுசெய்யும் விதமாக இந்த விலையேற்றம் இருக்கட்டும் என்றும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

ஆனால், இந்த விலை நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி ஏசி குடோன்களில் வைத்து பாதுகாத்த பதுக்கல்காரர்களுக்கு தான் இத்தனை லாபம் என்கிறார்கள் விவசாயிகள். மற்றொரு பக்கம் மற்ற விவசாய விளைபொருட்கள் ரொம்பவே அடிமட்ட விலைக்கு போனதால் பெருங்கவலையில் உள்ளனர் விவசாயிகள். இதில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ. 5க்கும், ரூ. 7க்கும், ரூ. 10க்கும் விற்பதால் பெருங்கவலையில் உள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, நகரம் சேந்தன்குடி, செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பெரியாளூர், பாண்டிக்குடி, நெய்வத்தளி, மேற்பனைக்காடு, கோட்டைக்காடு, ஆலங்காடு என 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, பலா தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்கப்பட்டு தினசரி 10 டன் வரை உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சம்பழங்கள் தரமானதாக இருப்பதால் மதுரை, கோவை, சென்னை, தஞ்சை உட்பட பல மாவட்டங்களுக்கும், கேரளாவில் பல நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

தற்போது கடந்த சில வாரங்களாக கேரளா உட்பட பல பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் குளிர்பானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் எலுமிச்சம்பழ விற்பனை படிப்படியாகக் குறைந்து ஒரு கிலோ ரூ. 5 முதல் ரூ. 10க்கு கீழ் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை மரங்களில் இருந்து பழங்கள் சேகரிக்கும் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்கக் கூட போதாது எனத் தவித்து வருகின்றனர் விவசாயிகள். கீரமங்கலம் கமிசன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சம்பழங்கள் வரத்து உள்ளது. விலை குறைவாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்தும் கூட வெளியூர் சந்தைகளில் நட்டத்திற்கே விற்பனை செய்து வருவதாக வியாபாரிகளும் கூறுகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நிரந்தரமான விலை கிடைக்காததன் விளைவாக தினசரி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

Next Story

புரட்டாசி எஃபெக்ட்; ஒரே நாளில் 17 லட்சத்திற்கு விற்பனையான காய்கறிகள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Puratasi Effect; 17 lakh worth of vegetables sold in farmers markets in a single day

 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் மக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

 

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

 

ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865 -க்கு விற்பனையானது. அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து 122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.