சென்னையில் பட்டப்பகலில் விசிக பிரமுகரை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் காரில் தப்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 40 வயதான இவர் மீது சுற்றியுள்ள காவல்நிலையங்களில் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் சென்னை காவல்துறையால் ஏ பிரிவு ரவுடியாக பதிவு செய்யப்பட்டவர். திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
விருகம்பாக்கம் தொகுதியின் அமைப்பாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது பகுதியில் டீ குடிக்கச் சென்ற அவரை காரில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரமேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்டதன் காரணம் முன் விரோத நடவடிக்கையாக இருக்கலாமா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். அரசு அலுவலகம் முன்பே விசிக நிர்வாகி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.