Skip to main content

அரசினர் விடுதியில் தரமற்ற உணவு; பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் மாணவிகள்!

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Poor quality food for girl students in government hostel near Vaniyambadi

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் அரசினர் சிறுபான்மையினர்  மாணவிகள்  விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கி கல்லூரி படிப்பை மேற்கொள்வதாக தகவல் பலகையில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகளிடம் விசாரித்த பொழுது 17 பேர் மட்டும் விடுதியில் தங்கி பயின்று வருவதாக தெரிவித்தனர்.

விடுதி சமையலர் காலை 8.30  மணிக்கு மேல் விடுதிக்கு வந்து சமைப்பதால், காலை உணவை மாணவிகள் உண்ண முடியாமல் கல்லூரிக்கு செல்வதாகவும், மாலை கல்லூரியில் இருந்து திரும்பிய பின்னரே தினந்தோறும் காலை உணவையே சாப்பிட வேண்டிய அவல நிலை நீடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஓம் பிரகாசம், இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விடுதி காப்பாளர் விசாரிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விடுதிக்கு வந்த காப்பாளர் புகார் அளித்த மாணவிகளை அழைத்து மிரட்டி உணவின் மீது எந்த பிரச்சனையும் இல்லை உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுவதாக கடிதம் ஒன்றை எழுதி அனைவரையும் அதில் கட்டாயமாக கையெழுத்தை இடவேண்டும் என வற்புறுத்தி மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளரை தொலைபேசியில் அழைத்து தாங்கள் விடுதி காப்பாளரால் மிரட்டப்படுவதாகவும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விசிக மாவட்ட செயலாளர் உடனடியாக தகவலை சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜ ராஜனுக்கு தகவல் அளித்துள்ளார்.

Poor quality food for girl students in government hostel near Vaniyambadi

விடுதிக்கு இரவில் வந்த அலுவலர் சம்பந்தப்பட்ட காப்பகத்தில் விசாரணை மேற்கொண்டார். தாங்கள் தொடர்ந்து காலையில் உணவு அருந்தாமல் கல்லூரிக்கு செல்வதாகவும், உணவு பட்டியலை காட்டி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர் தான் கடந்த இரண்டு ஆண்டுகளில் பட்டியலில் உள்ளவாறு ஒரு நாள் கூட தோசையோ அல்லது பூரியோ உணவை கண்ணால் கண்டது கூட இல்லை எனவும், தினந்தோறும் காலையில் சாப்பாடு மட்டுமே செய்து கொடுப்பதாகவும் புகார் அளித்தார். மேலும் அந்த காலை உணவு கூட காலை 8.30 மணிக்கு மேல் சமைக்கப்படுவதால் காலையில் சிற்றுண்டியை சாப்பிட்டு கிளம்பி கல்லூரிக்கு செல்ல காலதாமதமாகும் என்பதால் தினந்தோறும் காலையில் சாப்பிடாமலேயே கல்லூரிக்கு சென்று மாலை கல்லூரியில் இருந்து விடுதிக்கு திரும்பிய பின்னரே தினமும் உணவை சாப்பிட வேண்டிய சூழல் தொடர்வதாக கூறினார்.

அதுமட்டுமல்லாமல் விடுதியில் குடிக்க தண்ணீர் கூட இல்லை எனவும், குடிதண்ணீரை விலை கொடுத்து மாணவிகள் வெளியில் வாங்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் விடுதியில் மாணவிகளுக்கு குளியல் மற்றும் சலவை சோப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பொருட்கள் தங்களுக்கு அரசாங்கத்திலிருந்து வழங்கப்படும் நிலையில், அது தங்களை வந்து சேர்வதில்லை.  மேலும் குளியலறையில் பக்கெட், வாளி  படுக்கை அறைக்காக பாய், தலையணை, போர்வை என அனைத்து பொருட்களையும் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்துவதாகவும் இறுதியில் எதுவுமே தங்களுக்கு தரப்படுவதில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாணவர்களிடம் தகவல் அறிந்து கொண்ட சிறுபான்மை நல அலுவலர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.