Skip to main content

கவிஞர் க.மணி எழிலனின் காதலர் தின உலக சாதனை

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Poet K. Mani Ezhilan's Valentine's Day world record

பிப்ரவரி 14, 2024 இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமிரி எனும் ஊரில் வசிக்கும் கவிஞர்.க.மணிஎழிலன், மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர். சமீபத்தில் தனது வலது காலை இழந்து மாற்றுத்திறனாளி ஆனாலும் விடாத தனது தன்னம்பிக்கையால் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து பதிப்புலகில் செய்து வருகிறார். அவரது சாதனைகள் இன்னும் தொடர்கிறது.

தனது காதல் திருமணத்தை புத்தகமாக எழுதி வெளியிட்ட இவர், இன்று தான் உயிரோடு இருப்பதற்கு காரணமான தன் காதல் மனைவிக்கு சமர்ப்பணமாக ஒரு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சென்னை, நீலாங்கரையிலிருந்து சுமார் 6 கிமீ. தொலைவில் கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் மூலம் 60 அடி ஆழத்தில் (18 மீட்டர்) சென்று ஒரு சினிமாவுக்கான கதைச்சுருக்கத்தை எழுதி அதனை உடனே தட்டச்சு செய்து புத்தகமாக்கி ஆழ்கடலிலே அதனை வெளியிட்டு சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை ஸ்கூபா டைவிங்கிலும், பதிப்புலகிலும், எழுத்துலகிலும் இது போன்ற சாதனையை எவரும் செய்யவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனை assist world records உறுதி செய்து சான்றிதழினை வழங்கியுள்ளது.

Poet K. Mani Ezhilan's Valentine's Day world record

ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி புயல் மையம் கொண்டிருப்பதாக தகவல் வரும். சென்னையையும், ஆந்திராவையும், பாண்டிச்சேரியையும் கடந்து மிகப்பெரிய சேதத்தை உருவாக்கி விடும். அதற்குப்பின் அந்த இடத்தில் மிகப்பெரிய மாற்றம் அடைந்து அமைதி உண்டாகும். இதுபோல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் எனும் புயல் தமிழ்நாட்டில் மையம் கொண்டு பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டு போகும். அப்படியொரு தேர்தலை மையப்படுத்தி “மையம்” எனும் தலைப்பில் திரைப்படத்திற்கான கதையை உருவாக்கி இருக்கிறார் கவிஞர் க.மணிஎழிலன்.

Poet K. Mani Ezhilan's Valentine's Day world record

இந்தக்கதை திரைப்பட உலகில் மிகப்பெரிய வரவேற்பை பெறக்கூடிய படமாக அமையும். இதுபோல் ஒரு தேர்தலை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடத்தினால் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்தக்கதை தயாரிப்பாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்று விரைவில் திரைப்படமாக வெளிவரும் என கூறினார். இதற்கு முழு உறுதுணையாக இருந்து பயிற்சி அளித்தவர் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர், டெம்பிள் அட்வென்சர் நிறுவனர் அரவிந்த் தருண் ஸ்ரீ. 

கிட்டத்தட்ட கடலுக்கடியில் 30,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை எடுத்தவர். இவரது மகள் தாரகை ஆராதனா ஏழரை வயதிலேயே நீச்சலில் பல்வேறு உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் க.மணிஎழிலனின் இந்த சாதனையை அனைத்து காதலர்களுக்கும் அவரது காதல் மனைவி அமுதா மணிஎழிலனுக்கும், அவரது மகள்கள் மைத்ரா, பவித்ராஸ்ரீ அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார். இவரது சாதனைகள் தொடர வாழ்த்துவோம்.

சார்ந்த செய்திகள்