Skip to main content

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

one person involved serial theft two-wheelers was arrested

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டுள்ளது ஆர்.எம் திருமண மண்டபம். இங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வந்த கண்டியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்(35) என்பவரின் இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் இதுகுறித்து மணலூர் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

 

அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன  இருசக்கர வாகன வழக்கு சம்பந்தமாகத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார் கண்காணிப்பாளர் பகலவன். அதன்படி மணலூர் பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலர்கள் தலைமையில் தனிப்படை அமைத்துக் காணாமல்போன வாகனங்களைத்  தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை திருவண்ணாமலை மாவட்டம், பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(23)  என்பவர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் பல்வேறு இடங்களில் இதேபோன்று இருசக்கர வாகனம் திருடியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட பின் நீதிமன்ற உத்தரவின் படி சிறைக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து விரைவாகக் குற்றவாளியைக் கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்