தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்திற்கு 37 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் சிவன்ராஜ். ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் கடந்த சில மாதமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். மேலும் விளையாடுவதற்காகத் தனது தந்தை மற்றும் பிறரிடம் கடன் வாங்கி விளையாடி வந்த சிவன்ராஜ் இதுவரை ரூ. 6 லட்சம் வரை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மீண்டும் தந்தையிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கிச் சென்ற சிவன்ராஜ் அத்தனையும் ரம்மியில் இழந்துள்ளார்.
இந்நிலையில் சிவன்ராஜ் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில், தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மேலும் சிவன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துப் பேசிய அவரது தந்தை, “சிவன்ராஜ் தொடர்ந்து பணம் கேட்டுக்கிட்டே இருந்தான். நானும் பணம் கொடுத்துக்கிட்டே இருந்தேன். இரண்டு நாளைக்கு முன்னாடி கடன் இருக்கு எப்படியாவது பணம் வேணும்னு சொன்னான். அதுனால இருந்த கொஞ்ச இடத்தையும் வித்து ஒன்னரை லட்சம் பணம் கொடுத்தேன். அதையும் ரம்மி விளையாண்டு இழந்துட்டான்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.