Skip to main content

நியோமேக்ஸ் மோசடி வழக்கு; அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
Madurai branch of the High Court ordered on Neomax fraud case

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின. 

இந்த நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கில் சார்லஸ் இளையராஜாவிற்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, ‘நியோமேக்ஸ் வழக்கில் என்னதான் நடக்கிறது?. இன்னும் எவ்வளவு கால தேவைப்படும்?. இந்த வழக்கு தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?. எத்தனை பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்?. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. 

சொத்துக்களை வழக்கில் இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு தாமதிக்க என்ன காரணம்? அரசாணை வெளியிடுவது தொடர்பாக இனியும் கால அவகாசம் வழங்க முடியாது. எனவே, அக்டோபர் 19ஆம் தேதிக்குள் நியோமேக்ஸ் நிதி நிறுவன சொத்துக்களை வழக்கில் இணைத்து அதனை முடக்கி அரசாணை வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும் அவர், “அரசாணை வெளியிட தவறும்பட்சத்தில் உள்துறை செயலர், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி ஆஜராக நேரிடும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்