Skip to main content

இவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிடும்போது கலெக்டர் என்ன செய்தார்? - மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
pee


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழக அரசு முயற்சி என்கிறார் மார்க்சிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.    அவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கடந்த 22-5-2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்த போது  அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர். 

 

இத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர். இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கிசூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா? 22-ஆம் தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடையுத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்? 

 

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? அவர்களுக்கு  ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாத போது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்?அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா? நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன. 

 

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழிகாட்டுதலில் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 


மேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது. இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு  வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. 

 

 

ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உத்தரவு 

தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை  மே மாதம் 22-ஆம் தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிசூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும். ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு. 

 

தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழகஅரசு  நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதிமன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?” - கே. பாலகிருஷ்ணன் கண்டனம்

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
 K. Balakrishnan Condemned to finance minister nirmala sitharaman

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசிடம் மாநில அரசு நிவாரணம் கோரியிருந்தது. அதே சமயம் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஒருவர், “கேட்கும் போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம்மா?” எனக் கேட்டிருந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசு தொடர்பாகப் பேசியது சர்ச்சையானது. 

இந்த சூழலில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (23-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசும், மத்திய நிதியமைச்சரும் நடந்து கொள்கின்றனர். தமிழ்நாடு அரசைப் பற்றி முழுக்க முழுக்க அவதூறு பரப்பும் பணியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட்டுள்ளார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசக்கூடாது. மாநில அரசு மீது அவதூறு பேசும் நேரமா இது?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு எந்த மத்திய அமைச்சர் வந்தார்கள்? இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும் ஒரு ரூபாய் கூட கூடுதல் நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. நிவாரணப் பொருட்களுக்காகவும், மீட்புப் பணிக்காகவும், தமிழக முதல்வர் ரூ.21,000 கோடி கேட்டார். ஆனால், அதற்கு மத்திய அரசு ரூ.21 கூட தரவில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஏன் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கூடாது? தமிழகத்துக்கு உடனடியாக ரூ.2,000 கோடியை நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்க வேண்டும். தமிழக மக்களுக்குத் தர வேண்டிய நிதியை கொடுத்துவிட்டு அரசியல் செய்யுங்கள்” என்று கூறினார். 

Next Story

‘ஜெயலலிதா பேசிய மாநில நலன்; காற்றில் பறக்கவிட்ட இபிஎஸ்’ - பாலகிருஷ்ணன் சாடல்

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

திமுக கூட்டணிக் கட்சிகளை குறித்து விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளைப் பார்த்து இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்று ஊடகங்களிடம் கூறுகிறார். மக்களுக்கு எதிராகச் செயல்படும் பாஜகவிடம் கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிசாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது. ஈரோடு இடைத்தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிசாமியின் நிலைமையை கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.

 

K. Balakrishnan who severely criticized Edappadi Palinisamy

 

தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளந்தது. மத்திய ஆட்சியின் தயவோடு அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பேசி வந்த மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளைக் கூட காற்றில் பறக்கவிட்டார். ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள் என்று தயங்காமல் செயல்பட்டார். இதன் விளைவாக மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் விரோத சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்கும் முடிவு உள்ளிட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஆதரித்தது அதிமுக. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பியது உட்பட மத்திய அரசின் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் எதையும் எதிர்க்காமல் அடங்கி கிடந்தது பழனிசாமியின் ஆட்சி.

 

தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சியான பிறகும் கூட இந்தப் போக்கில் மாற்றமில்லை. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் கண்டனத்தையும் தாண்டி, ஆளுநரின் அரசியலுக்கு ஆதரவளித்தார் எடப்பாடி பழனிசாமி. தற்போதும் கூட, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள மோடியின் உற்ற நண்பரான அதானியின் ஊழல் - முறைகேடு பற்றியும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல் குறித்த பிபிசி ஆவணப்படம் பற்றியும் எடப்பாடி வாய் திறக்கவில்லை. நாட்டு மக்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளை காப்பாற்றும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை பற்றி பேசக்கூட விருப்பமில்லாத எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது நகைப்புக்குரியது. அவலத்திற்குரிய இந்தப் போக்கிற்கு வரும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவதற்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் தயாராகவுள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

 

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரமும் நாட்டின் சுதந்திரத்தையும், மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவத்தையும், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் சீரழித்து வருகின்றனர். மாநில உரிமைகளை நசுக்கி, ஒற்றை ஆட்சியை நிலைநாட்டுவதுதான் அவர்களின் நோக்கம். இந்தக் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசியல் சட்ட பாதுகாப்பு, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, மாநில உரிமைகள் உள்ளிட்ட கொள்கை அடிப்படையிலேயே திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சதிக் கூட்டத்தை தோற்கடிக்க முயல்கின்றன. ஆனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவினை அதிமுகதான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று பேசியிருக்கிறார். இதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம்” எனக் கூறியுள்ளார்.