
டெல்லியில் அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அதிமுக ஆதரவளித்ததாக தவறான தகவல்களை திமுகவினர் பரப்பி வருகின்றனர். தவறான பொய்யான செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். நான் அது மாதிரி எந்த காலத்திலும் நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது. நான் பேசியது ஆகஸ்ட் மாதத்தில் கனிமவள சட்டங்களை கொண்டு வரும்பொழுது அன்று இருந்த நிலவரம் வேறு. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கனிம வளங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்தார். அப்பொழுது ஏலம் என்ற முறை இல்லாமல் தனியாருக்கு தாரை வார்த்ததன் காரணமாக நிலக்கரி ஊழல் என்ற மாபெரும் ஊழல் வெளிப்படுத்தப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.
எப்படி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வந்ததோ அதுபோல கோடிக்கணக்கான பணத்தை சுரங்கங்கள் தாரைவார்த்ததின் மூலமாக திமுக-காங்கிரஸ் அங்கம் வகித்த அரசாங்கம் தவறான வழியால் நாட்டிற்கு பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக மோடி அரசு 2021-ல் ஏலம் முறையில் கனிம வளங்களை தர வேண்டும் என சட்ட கொண்டுவரப்பட்டது. அப்படி சட்டம் கொண்டு வரும்போது நான் பேசியது' முன்பு திமுக காங்கிரஸ் அரசாங்கம் செய்த ஊழலைத் தடுக்க வேண்டும் என்றால் தனியாருக்கு நேரடியாக உரிமங்கள் கனிம வளங்கள் தரக்கூடாது. ஏல முறையில் வர வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன் என்று பொதுவாக சொன்னேன். நான் மதுரையில் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விடுவதற்கு உரிமை தர வேண்டும் என்று எக்காரணத்தைக் கொண்டும் பேசியது கிடையாது'' என்றார்.