திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெருமாள். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஈரோட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். வேலை முடிந்ததும் இரவில் மணிக்கூண்டு பகுதியில் சாலையோரம் தங்குவது வழக்கம். இருவரும் அவ்வப்போது இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வாடிக்கை.
அதைப்போல் 29ஆம் தேதி நள்ளிரவு இரண்டு பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் கையில் இருந்த ஆக்ஷா பிளேடால் பெருமாள் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பெருமாள் இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, டவுன் டி.எஸ்.பி ராஜு, இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், மணிகண்டன், பாலமுருகன் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கொலை நடந்த இரண்டு மணி நேரத்தில் கொலையாளி லட்சுமனனை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து லட்சுமணன் போலீசிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "நானும் பெருமாளும் நண்பர்கள் இரண்டு பேரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தோம். இரவு நேரங்களில் மணிக்கூண்டு பகுதியில் ரோட்டோரம் தங்குவது வழக்கம். அதைப்போல் நேற்று இரவு மணிக்கூண்டு விநாயகர் கோவில் அருகே மது அருந்திக் கொண்டிருந்தோம். கோயிலுக்கு வேண்டுதலுக்காக எனது முகத்தில் தாடி வளர்த்திருந்தேன். என் தாடியை பார்த்து பெருமாள் என்னை கிண்டல் செய்தான். தாடி வைத்தால் நீ என்ன ரவுடியா என சொல்லி என்னை அடித்து சாக்கடையில் தள்ளினார். இதில் ஆத்திரமடைந்த நான் என்னிடம் இருந்த பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டேன். பிறகு தான் பெருமாள் இறந்தது தெரியவந்தது. என கூறியிருக்கிறார்.