Skip to main content

அரசு விடுதி மாணவிகளிடம் சேட்டை! கல்லூரி மாணவன் உள்பட4 பேர் கைது!!

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

harasments to girl students! 5 people including a college student were arrested!!

 

பழனி சத்யா நகர் பகுதியில் உள்ள பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர்.

 

விடுதி மாணவிகளுக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்புத் துறையில் உள்ள அதிகாரிகள், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்களை தொடர்பு கொள்ளலாம் கூறி தொடர்பு எண்களை கொடுத்துச் சென்றனர். 

 

இந்நிலையில் சில தினங்கள் முன்பு அதிகாரிகள் கொடுத்த தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவிகள் சில புகார்களைத் தெரிவித்துள்ளனர். மாணவிகள் கொடுத்த தகவல் மற்றும் புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவிகள் சிலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் காப்பகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

புகாரின் பேரில் பழனி சத்யா நகரை சேர்ந்த கிருபாகரன், ராகுல், பரந்தாமன் மற்றும் 18 வயதான கல்லூரி மாணவன் ஒருவர் உட்பட 4 பேரைப் பழனி அனைத்து மகளிர்  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் அலட்சியமாக பணிபுரிந்ததாக கூறி விடுதி காப்பாளர் அமுதா மற்றும் விடுதி காவலாளி விஜயா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்