Skip to main content

தாலி கட்டியவுடன் உடல் உறுப்பு தானம் செய்த மணமகன்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Groom donates body organs after marriage

 

புதுக்கோட்டை மாவட்டம்  கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த துரையின் மகன் ராஜேஷ் டிப்ளமோ படித்து முடித்தவுடன் வேலை தேடி கோவை சென்றுள்ளார். அங்கு மாத சம்பளத்திற்கு வேலை செய்து சேமித்த பணத்தில் சில ஆண்டுகளில் தனியாக சிறு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அப்பகுதியில் திமுக உறுப்பினராகி முதலமைச்சர் ஸ்டாலின் பெயரில் உள்ள ரத்த தான கழகத்தில் இணைந்து 15-க்கும் மேற்பட்ட முறை ரத்த தானமும் செய்துள்ளார்.

 

இந்த நிலையில், ராஜேஷுக்கும் அணவயல் பெரியசாமி மகள் உமாமகேஸ்வரிக்கும் (டிப்ளமோ நர்சிங்) சேந்தங்குடி மணமகன் இல்லத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன் மணமகன் ராஜேஷ் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். எனது உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து எனது மனைவியிடம் முன்பே சொல்லிவிட்டேன். செவிலியர் என்பதால் உயிர் பிழைக்க உடல் உறுப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்ததால் ஒத்துக்கொண்டார்.

 

அதன் பிறகே முதலில் கண் தானம் செய்ய இணையத்தில் பதிவு செய்துள்ளேன். விபத்துகளில் பலர் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறப்பதைக் காண்கிறோம். அது போல நடக்கக் கூடாது. எல்லோரும் உயிருடன் இருக்கும் வரை ரத்த தானம் இறக்கும் நிலையில் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்றார். திருமணத்திற்கு வாழ்த்த வந்த உறவுகள்  ராஜேஷின் இந்த செயலைப் பார்த்து நெகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்குத் தென்னங்கன்றுகளை மணமக்கள் பரிசாக வழங்கினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்