Skip to main content

பசுமை தீபாவளி கொண்டாடினால் அழிந்த வனங்களை மீட்க முடியும் - கிரீன் நீடாவின் நம்பிக்கை இளைஞர்கள்

Published on 03/11/2018 | Edited on 04/11/2018
gr

 

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றாலே பல நாட்களுக்கு பட்டாசு சத்தம் கேட்டும். தீபாவளி நாளில் விடியவிடிய வெடிவெடித்துவிட்டு  காலையில் புத்தாடை அணிந்து புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க வியர்க்க விருவிருக்க நின்று முதல்காட்சியை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து கறி சோறு தின்ற காலம் எல்லாம் மாறிப் போனது. 

 

இன்றைய இளைஞர்களே இதையெல்லாம் மறந்து வரும்  நிலையில் பட்டாசு வெடிக்க நேரம் (குறுக்கியது) குறித்தது நீதின்றம். கொஞ்ச நஞ்ச பட்டாசு சத்தத்திற்கும் தடை.   இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் இன்றைய இளைஞர்கள் இயற்கையை காக்க வேண்டும் விவசாயம் காக்க வேண்டும் பாரம்பரியம் காக்க வேண்டும் என்று சாப்ட்வேர் எஞ்சினியரும் படையெடுக்கத் தொடங்கியதால் இன்று பல ஊர்களில் ஏரி குளங்கள் சொந்த செலவில் தூர் வாரப்பட்டுள்ளது. 

 

மழை பெய்தால் நீர்நிலைகள் நிரம்பும்.  ஆனால் காடுகளாக இருந்த நிலப்பரப்பு இன்று அழிக்கப்பட்டு வீடுகளும் தொழிற்சாலைகளும் உருவாகிவிட்டது. 
மீண்டும் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று அதற்கும் இளைஞர் படை கிளம்பிவிட்டது. ஒவ்வொரு கிராமத்தில் பனை விதை நடுவதும் நீண்ட நாட்கள் வளரும் பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்ப்பதும் இவர்கள் பணியில் ஒரு பகுதியாக ஒதுக்கிச் செய்கிறார்கள்.  இப்படி வறட்சியை பார்த்து டெல்டாவில் உருவானது தான் கீரீன் நீடா என்ற அமைப்பு. 

 

மரம் வளர்ப்போம்.. மழை பெறுவோம்.. வளம் பெறுவோம் என்பதே இந்த அமைப்பின் நோக்கமாக கொண்டுள்ளது. தங்கள் சம்பளத்தில் கொஞ்சம் செலவு செய்து மரக்கன்றுகளை நட்டால் போதும் நம் சந்ததிக்கு மழை கிடைக்கும் இப்ப தூர்வாரிய ஆறு ஏரி குளம் குட்டைகள் நிரம்பும் விவசாயம் செழிக்கும் நாடும் முன்னேறும் என்று புறப்பட்டு விட்டார்கள் மரக்கன்றுகளுடன். காலி இடங்கள் எங்கிருந்தாலும் மரக்கன்றுகளுடன் வந்து நிற்கிறார்கள் கிரீன் நீடா இளைஞர்கள்..

 

  தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் துணிக்கடைகளில் வரிசையாக நிற்காமல் இன்று நீடாமங்கலம் பாலாஜி நகர் பசுமை பூங்காவில் வரிசையாக நின்றார்கள்.  அவர்கள் கைகளில் மரக்கன்றுகள் அவர்களுடன் கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்கமும்  இணைந்து கொண்டது.

 


 கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் கூடிய கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்க துணைத் தலைவர் நீடா ரியாஸ் உள்பட இரு அமைப்புகளின் உறுப்பினர்களும்.. பட்டாசு இன்றி மரக்கன்றுகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடி 100 மரக்கன்றுகளை நட்டார்கள். இதே போல இன்னும் பல ஆயிரம் மரக்கன்றுகளை நட கல்லூரி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருவதுடன் விதை பென்சி்களையும் உருவாக்கி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். சில ஆண்டுகளில் லட்சம் மரக்கன்றுகளை வளர்ப்பதே எங்கள் லட்சியம் என்கிறார் கிரீன் நீடா ராஜவேலு


இளைஞர்களின் ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்.   எல்லாருமே பசுமை தீபாவளி கொண்டாடினால் அழிந்த வனங்களை மீட்க முடியும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கு போராடும் 2000 மரங்களின் உயிர் காக்க உதவுங்கள்...' கண்ணீரோடு உதவி கேட்கும் கிரீன் நீடா 

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

2018 நவம்பர் 16 ந் தேதி புரட்டிப் போட்ட கஜா புயல் ஒட்டு மொத்த மரங்களை அடியோ சாய்த்துப் போட்டது. நிழலுக்கு கூட சாலை ஓரத்தில் நிற்க முடியாமல் மக்கள் தவித்தனர். இந்த நிலையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நீடாமங்கலத்தில் தொடங்கிய “கிரீன் நீடா” அமைப்பினர் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதுடன் ஊருக்கு ஊர் புதிய கிளைகளை உருவாக்கி தன்னார்வ அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்களை இணைத்து திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'


இந்த நிலையில் தான் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் காலத்தை விட குறுகிய காலத்தில் நிழல் தரும் ஆலமரங்கள் போன்ற மரங்களின் கிளைகளை வெட்டி நட்டால் விரைவிலேயே துளிர்த்து பலன் கொடுக்கும் என்ற நமது ஆலோசனையை ஏற்றனர். புயல் தாக்கி ஓராண்டு முடிந்த நிலையில் 2019 நவம்பர் 17 ந் தேதி மன்னார்குடி – நீடாமங்கலம் சாலையில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு ஆலம்போத்து, உதியம் போத்து, வாதமடக்கி உள்பட பல வகையான மரப் போத்துகளை கிரீன் நீடா வுடன் நெடுஞ்சாலைத்துறை, சமூக ஆர்வலர்கள், உள்ளூர், வெளியூர் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து 2100 மரப் போத்துகளை நட்டனர்.

நடப்பட்ட போத்துகள் நம்பிக்கை கொடுத்தது தொடர்ந்து மழை இருந்ததால் ஒரு மாதத்திலேயே துளிர்விடத் தொடங்கியது. 2100 போத்துகளில் 2000 போத்துகள் துளிர்க்கத் தொடங்கியது. போத்துகள் துளிர்க்கத் தொடங்கியதும் நட்ட இளைஞர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது சில வருடங்களிலேயே மரங்களாகி நிழல் கொடுக்கும் என்றனர்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'

 

மழைக் காலம் முடிந்தது. கடுமையான வெயில் தொடங்கி விட்டது. ஆனால் நல்ல முறையில் துளிர்க்கும் சுமார் 2 ஆயிரம் உயிர்களுக்கு உணவாக தண்ணீர் இல்லை. இதைப் பார்த்த கிரீன் நீடா வாரத்தில் 2 நாட்கள் டேங்கர் மூலம் தண்ணீர் ஊற்ற திட்டமிட்டனர். அதற்கான ஒரு நாளைக்கு ரூ. 4 ஆயிரம் வரை செலவாகிறது. அதாவது தொடர்ந்து 12 வாரங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் உயிருக்கு போராடும் மரப் போத்துகளை காப்பாற்றலாம் என்ற நிலையில் சில வாரங்கள் தங்கள் கையில் இருந்து செலவுகளை சமாளித்தனர். ஆனால் இன்னும் பல வாரங்கள் தண்ணீர் ஊற்ற வழியில்லை. என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் கவலையுடன் நிற்கிறார்கள் இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீர் ஊற்றி வளருங்களேன் என்று சிலர் அதிகாரிகளிடம் கேட்க.. எங்களால் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.

green


நெடுஞ்சாலைத்துறையினர் புயல் பாதித்த மாவட்டங்களில் நட்ட மரக்கன்றுகளுக்கே தண்ணீர் ஊற்றாமல் வாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு எப்படி தண்ணீர் ஊற்றுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர் இளைஞர்கள்.

தற்போது தண்ணீர் ஊற்ற கொடையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அமைச்சர் காமராஜ், எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்களும் கிரீன் நீடா விழாவில் கலந்து கொண்டு பாராட்டியுள்ளனர். இப்போது நெருக்கடியான நிலையில் அவர்களும் சில வாரங்கள் வாடும் மரப் போத்துகளுக்கு தண்ணீர் ஊற்றி உயிர் காக்க உதவலாம்.

 

 'Help save the life of 2000 struggling trees ...'


மரங்களின் மீது அக்கரையுள்ள சமூக ஆர்வலர்கள் 2 ஆயிரம் மர உயிர்களை காக்க மரங்களின் காதலர்கள் எந்த வகையிலாவது உதவலாம் என்ற கோரிக்கையை கண்ணீரோடு முன் வைத்துள்ளனர் கிரீன் நீடா அமைப்பினர். நன்கு வளரும் மரப் போத்துகளுக்கு டேங்கரில் தண்ணீர் ஊற்றுவதைப் பார்த்து சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர்.

எங்கள் உயிரை காக்க நீங்கள் இப்போது உதவினால் உங்கள் சந்ததிக்கு எப்போதும் நிழல் கொடுப்போம் என்பது போல சோகமாக் பார்க்கின்றன துளிர்விட்டு வளரும் மரக்குழந்தைகள்..

உயிருக்கு போராடும் மரங்களை காப்பாற்ற உதவிகள் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு 9940220986 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நிலை அறிந்து உதவலாம்.

“மரங்களை நாம் வளர்த்தால் மரங்கள் நம்மை வளர்க்கும்”

 

 

 

Next Story

காப்பி பேஸ்ட் கலெக்டர்!  பட்டாசு விவகாரத்தில் பல்டி! -மோடி அரசுக்கு எடப்பாடி அரசு ஜிங்ஜக்!

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
sivakasi protest

 

பசுமைப் பட்டாசு என ஏதேதோ சொல்லி,  உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் நிபந்தனைகளை ஏற்பதெல்லாம், போகாத ஊருக்கு வழி கேட்பதுபோல் இருக்கிறது என்று, கடந்த 21-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களைத் திரட்டி, பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் என்ற பெயரில் சிவகாசியில் முழு கடைப்பு நடத்தி,   விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள் பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்குழுவினர்.  



“காபித்தூள் இல்லாமல் காபி போட முடியுமா? பச்சை உப்பு (பேரியம் நைட்ரேட்) இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியுமா?” என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போன்றவர்களெல்லாம், அந்தப் போராட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக முழங்கிவிட்டுச் சென்றனர். போராட்டத்தை முன்னெடுத்த தோழர்களும்  “விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்கச் செய்வோம்.” என்று கூறி, போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களைக் கலைந்துபோகச் சொன்னார்கள். 



உச்ச நீதிமன்ற நிபந்தனையால், பட்டாசுத் தொழிலில் பேரியம் நைட்ரேட் தடை செய்யப்பட்ட நிலையில், 60 சதவீத பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்யமுடியாது என்று பட்டாசு ஆலை அதிபர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். போராட்டம் முடிந்து மூன்று நாட்கள் கடந்தபிறகு, இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், தொழிலாளர் நலன் கருதி, பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தியிருக்கிறார்.  

 

sivakasi protest




அந்த அறிக்கையில், உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பில், சரவெடிகள் தயாரிப்பது,  வேதிப்பொருளான பேரியம் உப்பு பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பது  மட்டும் முற்றிலும் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் {PES0),  பேரியம் உப்பு பயன்படுத்தாமல், Rockets,  Amorces Roll caps,  Dot Caps,  Ring Caps,  Atom Bombs,  Chorsa,  Maroons (like Lakshmi, Kuruvi etc.),  Red Sparklers,  Red Color Matches,  Yellow Color Matches,  Red Pellets,  Yellow Pellets ஆகிய பட்டாசுகளைத் தயாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளனர்.  பேரியம் நைட்ரேட் என்ற மூலப்பொருள் இல்லாமல் தயாரிக்க இயலும் என,  பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு நிறுவனம் {PES0) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததன் அடிப்படையில்,  மேற்கண்ட பட்டாசுகளைத் தயாரித்திடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், பட்டாசுத் தொழிலாளர்களின் நலன் கருதி, உடனடியாக பட்டாசு ஆலைகளைத் திறந்து செயல்படுமாறும்,  உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்காமல்,  இடைக்கால தீர்ப்பின்படி உடனடியாகச் செயல்படுமாறும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் வலியுறுத்தியிருக்கிறார்.  



பட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி, சட்ட விதி எண் 3 (3B)-யிலிருந்து பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிக்கும்படி மத்திய அரசினை வலியுறுத்தவேண்டும் என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மனு அளித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளை,  அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டு, இத்தொழிலுக்காகப் போராடிய தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் கொந்தளித்துக் குமுறுகிறார்கள். எங்களின் கோரிக்கை மனுவைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆட்சியர் என்று, அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர். 


பட்டாசு விவகாரத்திலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு  தமிழக அரசு ஜால்ரா போடுவதை,  ஆட்சியரின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.