Skip to main content

“தாய்லாந்தில் சிக்கியிருக்கும் மற்ற தமிழர்களையும் மீட்கும் பொறுப்பை அரசு  ஏற்கும்” - அமைச்சர் மஸ்தான் 

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

"Government will accept the responsibility of rescuing other Tamils ​​trapped in Thailand" - Minister Mastan

 

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் தாய்லாந்து நாட்டில் பணி செய்ய சென்றனர். அங்கிருந்து அவர்கள் முறைகேடாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத பணிகளை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும், பணி செய்ய மறுத்தால் அந்த கடத்தல் கும்பல் இவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் இருந்து சென்ற 300 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 13 பேர் இருந்தனர். 

 

தமிழர்கள் மியான்மரில் சிக்கி தவிக்கும் விவகாரத்தை அறிந்ததும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ள 20 தமிழர்களை மீட்டு வருவதற்கான உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை எடுத்த பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப அதற்கான டிக்கெட் உள்ளிட்ட செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிற்கு தகவல் தெரிவித்தது. 

 

இந்நிலையில் மியான்மரில் சிக்கி தவித்திருந்த 13 தமிழர்கள்,  நேற்று தாயகம் திரும்புகின்றனர். 13 தமிழர்களும் ஹாங்காங்-லிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தனர்.  அவர்களை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்து நாட்டில் வேலை என கூறி பல்வேறு ஏஜண்ட்கள் மூலம் அங்கு சென்ற தமிழர்கள் பலர் தாய்லாந்தின் பக்கத்து நாடான மியான்மரில், சொன்ன வேலையை தவிர்த்து வேறு வேலைகள் வழங்கியுள்ளனர். அதனை இவர்கள் செய்ய மறுத்தபோது பல்வேறு இன்னல்களை சந்தித்து, அங்கு சிக்கி தவித்துள்ளனர். 

 

இந்தத் தகவலை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் தகவலை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரிவித்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்மூலம், இந்த 13 நபர்களும் தமிழ்நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தாய்லாந்திலிருந்து தமிழ்நாடு வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுகொண்டது. இன்னும் பல பேர் அங்கு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவர்களையும் அழைத்து வரும் பொறுப்பை அரசு ஏற்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்