Skip to main content

திடீரென மயங்கி விழுந்த அரசு பேருந்து நடத்துநர்!

Published on 08/02/2021 | Edited on 09/02/2021

 

government bust conductor pudukkottai district transport


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதுக்கோட்டை- கொத்தமங்கலம் செல்லும் அரசு டவுன் பேருந்தில், பழனியப்பன் (வயது 35) என்பவர் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் மணப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த திங்கள்கிழமை மாலை, புதுக்கோட்டையில் இருந்து கொத்தமங்கலம் வாடி மாநகர் கடைவீதிக்கு, பேருந்தில் நடத்துநராக வந்துள்ளார். 

 

பேருந்து மீண்டும் புதுக்கோட்டைக்குச் செல்வதற்காக, பேருந்தை ஓட்டுநர் திருப்பும் போது, பழனியப்பன் பின்பக்கம் பார்த்துக் கொண்டு விசில் ஊதிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டு பேருந்தை நிறுத்தச் சொல்லி மயங்கிக் கிடந்த நடத்துநரை மீட்டு, தண்ணீர் தெளித்து முதலுதவி செய்துள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து இறங்கிவந்த பேருந்து ஓட்டுநர் மயங்கிக் கிடந்த நடத்துநரை, அதே பேருந்தில் ஏற்றி கொத்தமங்கலம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.  

 

முன்னதாக, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி பணிமனை அதிகாரிகள், சிகிச்சை பெற்று வந்த நடத்துநர் பழனியப்பனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தொடர்ந்து இரண்டு நாட்களாக வேலை செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் கூறினாலும், கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக நடத்துநர் பழனியப்பன் கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.