Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பல்டி!

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
gokulraj murder case


கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், சாட்சிகள் விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.


திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல் அவரை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என அப்போது தகவல்கள் பரவின.


இந்த வழக்கில் சந்தேகத்தின்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். 


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டிருந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான ஜோதிமணி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமுதரசு தலைமறைவாகிவிட்டார். இந்த இருவரையும் தவிர மற்ற 15 பேரும் தொடர்ந்து சாட்சி விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.


முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் கல்லூரித் தோழி சுவாதி, அவருடைய தாயார் செல்வி ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அக்டோபர் 1, 2018ம் தேதி இதர சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பகல் 12.10 மணியளவில் விசாரணை தொடங்கியது. 


முதல் சாட்சியாக வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் புஷ்பலதா அழைக்கப்பட்டார். அவரிடம், சம்பவம் நடந்த நாளான 23.6.2015ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கோகுல்ராஜை யுவராஜ் தரப்பினர் கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் வெள்ளை நிற டாடா சபாரி கார் யார் பெயரில் பதிவாகி இருக்கிறது? என்று அரசுத்ததரப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் யுவராஜ் பெயரில் பதிவாகவில்லை. வேறு நபரின் பெயரில் பதிவாகி இருப்பதாக கூறினார்.


அவரை தொடர்ந்து அச்சக உரிமையாளர் வடிவேல், பருத்தி கிடங்கு உரிமையாளர் சிரஞ்சீவி, யுவராஜின் பக்கத்து தோட்டக்காரர் நவீன்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 


இவர்கள் மூவருமே கடந்த 2015ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட ஜேஎம்&2 நீதிமன்றத்தில் சிஆர்பிசி 164 வாக்குமூலத்தின்போது யுவராஜ் தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்து இருந்தனர். ஆனால் அக்டோபர் 1ம் தேதியன்று நடந்த விசாரணையின்போது மூவருமே பிறழ் சாட்சியமாக மாறினர். 


அச்சக உரிமையாளர் வடிவேல், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு துண்டறிக்கை அச்சிட்டு கொடுத்ததாக முன்பு வாக்குமூலம் அளித்திருந்தார். நேற்று முன்தினம் சாட்சி விசாரணையின்போது யுவராஜை யாரென்று தெரியாது என்றும், தான் அவருக்கு துண்டறிக்கை அச்சடித்துக் கொடுக்கவில்லை என்றும் கூறி பல்டி அடித்தார்.


அரசுத்தரப்பில் 13வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள சிரஞ்சீவிக்குச் சொந்தமான பருத்தி கிடங்கில்தான் அப்போது யுவராஜ் தரப்பினர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதற்காக அச்சிடப்பட்ட துண்டறிக்கையிலும்கூட அந்த கிடங்கில்தான் கூட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.


நேற்று முன்தினம் சாட்சியம் அளித்தபோது, தன்னிடம் இருப்பது பருத்தி கிடங்கே அல்ல. அந்த இடம் பருத்தி அரைக்கும் இடம். அந்த இடத்தில் போய் யாராவது கூட்டம் நடத்த வாடகைக்கு விட முடியுமா? என்று பல்டி சாட்சியம் அளித்தார். அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி யுவராஜ் தரப்பு வெளியிட்டிருந்த துண்டறிக்கையில் உங்களுக்குச் சொந்தமான பருத்தி கிடங்கில்தான் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கும் இடமாக குறிப்பிடப்பட்டு உள்ளதே என்று கேட்டார். 


அதற்கு சிரஞ்சீவி, துண்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் இருக்கும் இடம் எனக்குச் சொந்தமான பருத்தி அரைக்கும் இடம்தான். அந்த இடம் எப்படி துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது என்பது எனக்குத் தெரியாது என பதில் அளித்தார். 


குற்றவாளி கூண்டில் இருக்கும் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரையும் காட்டி, அவர்களை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கும் அவர் தெரியாது என்று பதில் அளித்தார். பின்னர் அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, ''யுவராஜூம் நீங்களும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்றும் நோக்கில் முன்பு சொன்ன சாட்சியத்தை மறைத்து இப்போது பொய் சாட்சி சொல்கிறீர்கள் என நான் சொல்கிறேன்,'' என்றார். 


அதற்கு, நாங்கள் எல்லோரும் மனசாட்சியுடன்தான் உண்மையை சொல்கிறோம் என்று சிரஞ்சீவி சொன்னார். எல்லோரும் என்று சொல்லும்போது கையை உயர்த்தி எல்லோரும் என கையை வளைத்துச் சொன்னார். அதற்கு கருணாநிதி, எல்லோரும் என்பதை விடுங்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கேட்டார். அதற்கு சிரஞ்சீவி, தவறு என்று பதில் அளித்தார்.


யுவராஜ் தோட்டத்திற்கும் அருகே உள்ள தோட்ட உரிமையாளரான நவீன்ராஜ், சம்பவம் நடந்த அன்று ஒரு காரில் ஒல்லியான தேகம் கொண்ட நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்த ஒரு வாலிபரை (கோகுல்ராஜ்) காரில் ஏற்றிச்சென்றதை பார்த்தேன் என்று முன்பு சிஆர்பிசி 164 வாக்குமூலத்தில் கூறியிருந்தார். அதனால் நவீன்ராஜின் சாட்சியம் முக்கியமானதாக கருதப்பட்டது.


இந்நிலையில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரான நவீன்ராஜ், அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிடுவதுபோல் சம்பவத்தன்று யாரையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார். குற்றவாளி கூண்டில் உள்ளவர்களைக் காட்டி அவர்களை முன்பே தெரியுமா எனக்கேட்டதற்கு யுவராஜ் மற்றும் அவருடைய சகோதரர் தங்கதுரை ஆகியோரை தெரியும் என்று பதில் அளித்தார்.


யுவராஜீக்கு நீங்கள் பத்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்து இருந்தீர்கள். அவர் கொடுத்த காசோலை செல்லாததால் அதன் மீது வழக்கு தொடர்ந்தீர்கள். அந்த வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததா? என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு சிரஞ்சீவி ஆமாம் என்று பதில் அளித்தார். அப்போது, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே., இந்தக் கேள்விக்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதை நீதிபதி நிராகரித்தார்.


அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, காசோலை வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும், இன்னும் யுவராஜ் உங்களுக்கு பணம் தரவில்லை. அவருக்கு எதிராக சாட்சி சொன்னால் உங்களுக்கு அவர் பணம் தராமல் போகலாம். மேலும் நீங்களும் அவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவருக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்கிறீர்கள் என்றார். அதற்கு நவீன்ராஜ், இல்லை என்று பதில் அளித்தார்.


அப்போதும் குறுக்கீடு செய்த எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜிகே, காசோலை வழக்கை தொடர்ந்தது நவீன்ராஜின் அண்ணன்தான். அவருக்குதான் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது என்றார். அந்த கருத்தும் பதிவு செய்யப்பட்டது. 


இதையடுத்து மதியம் 1.15 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. பின்னர் 2.20 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.


ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் கிடந்ததைப் பார்த்த ரயில்வே கேங்மேன் கார்த்திக், யுவராஜ் வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர் உஷாபிரியா, மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான சங்கர் வீட்டில் சோதனை நடந்தபோது உடன் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், கோகுல்ராஜின் சடலத்தைப் பார்த்த கிராம நிர்வாக உதவியாளர் பூபதிராஜா ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். 


காலையில் சாட்சியம் அளித்த அச்சக உரிமையாளர் வடிவேலிடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மேலும் சில கேள்விகள் கேட்க வேண்டியிருந்ததால் அவர் மீண்டும் அழைக்கப்பட்டார். அவரிடம் யுவராஜ் தரப்பு வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு துண்டறிக்கையைக் காட்டி, அதில் குறிப்பிட்டிருப்பது உங்கள் கையெழுத்தா? என்று கேட்டார். அதற்கு இல்லை என வடிவேல் கூறினார். அந்த துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது உங்கள் செல்போன் நம்பர்தானா? என்று கேட்டார். அதற்கு ஆமாம் என்று பதில் சொன்ன வடிவேல், தான் அந்த துண்டறிக்கையை அச்சடித்து கொடுக்கவில்லை என்று மீண்டும் கூறினார்.


அத்துடன் சாட்சி விசாரணை முடிந்தது. அப்போது மாலை 5.30 மணி. இதையடுத்து சாட்சிகள் மீதான அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி கே.ஹெச்.இளவழகன் கூறினார். 


நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. அரசுத்தரப்பில் அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் தவிர மற்ற சாட்சிகளான சிரஞ்சீவி, வடிவேல், நவீன்ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து பல்டி சாட்சியம் அளித்ததால், சிபிசிஐடி போலீசார் கடும் அதிருப்தி அடைந்தனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம்'- மனம் திறந்த இராபர்ட் பயஸ் 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 'There are still three of us left' - open-minded Robert Pius

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தன் உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த சாந்தன் உயிரிழந்தது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு முகாமில் மருத்துவ வசதிகள் இல்லாததாலேயே அவர் உயிரிழந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் 'சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் இருந்து ஓர் திறந்த மடல்' என்ற தலைப்பில் தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயஸ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த கடிதத்தில்

'உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

 'There are still three of us left' - open-minded Robert Pius

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துகொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆக்குகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை, யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசு நெறிமுறைகள், அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்த்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.