Skip to main content

சொட்டுநீர் பாசன தகராறில் விவசாயி கொலை: 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை!

Published on 14/07/2018 | Edited on 14/07/2018

 

sd


சேலம் அருகே, சொட்டுநீர் பாசன தகராறில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில் 4 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் குற்றவியல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தென்குமரை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மல்லிகேஸ்வரி என்பவருக்கும் தோட்டத்தில் சொட்டுநீர் பாசனம் செய்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

 

இது தொடர்பாக வெங்கடாஜலம் தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வந்த நிலையில், வெங்கடாசலத்தின் பாசன குழாய்களை மல்லிகேஸ்வரி குடும்பத்தினர் சேதப்படுத்தினர். இதனால், இருதரப்புக்கும் மோதல் வலுத்தது.

 

இந்நிலையில், மல்லிகேஸ்வரி மற்றும் அவருடைய மகன் செந்தில்குமார், உறவினர்கள் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று, வெங்கடாசலத்தை சரமாரியாக தாக்கியதில் அவர் இறந்தார். பின்னர் அந்த கும்பல், வெங்கடாசலத்தின் சடலத்தை கிணற்றில் வீசி விட்டு தப்பிச்சென்றனர். தலைவாசல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, மல்லிகேஸ்வரி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

 
இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, கொலை வழக்கில் கைதான மல்லிகேஸ்வரி, செந்தில்குமார், சத்தியவாணி, யுவராஜ், மாணிக்கம், தங்கம், கோமதி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

 

கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்த தகவலால் தென்குமரை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமாவளவன் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி; மேல்முறையீடு செய்ய பாமக முடிவு!      

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Defamation case against Thirumavalavan dismissed

 

பாமக தரப்பில் திருமாவளவன் எம்.பி  மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி, சேலம் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது.    

 

வன்னியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி, சேலம் 4வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் இமயவரம்பன் மனுதாக்கல் செய்தார்.  

 

இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, குணசேகர், சிவா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், திருமாவளவன் மீதான அவதூறு  வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

 

வழக்கு விசாரணைக்கு வந்ததால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்து இருந்தனர்.  இதனால் அந்த வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதையடுத்து காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கார்த்தி தரப்பில் கூறப்பட்டது.  

 

 

Next Story

நீதிபதியை கொல்ல முயற்சி; நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டு சிறை!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

Court employee sentenced 10 years

 

நீதித்துறை நடுவரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்கில், நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நான்காவது நீதித்துறை நடுவர் மன்ற அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, நீதிமன்றம் வழக்கம்போல் காலையில் கூடியது. நீதித்துறை நடுவர் பொன் பாண்டி தனது அலுவலக அறையில் இருந்து திடீரென்று கூச்சல் போட்டபடியே வெளியே ஓடி வந்தார். 

 

அப்போது அவர், அலுவலக உதவியாளர் பிரகாஷ் தன்னை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாகக் கூறினார். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவலர்கள் பிரகாஷை மடக்கிப் பிடித்து அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்துறையினர் பிரகாஷை கைது செய்து விசாரித்தனர். மேட்டூர் நீதிமன்றத்தில் இருந்து ஓமலூர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட பிரகாஷை, அங்கு பணியில் சேர்ந்த சில நாள்களில் சேலம் நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன அழுத்தம் காரணமாக, சேலம் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்த நாளன்றே, அவர் நீதித்துறை நடுவரை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. கொலை முயற்சியின்போது லேசான காயம் அடைந்த நீதித்துறை நடுவர் பொன் பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்பினார்.

 

இந்த வழக்கு விசாரணை, சேலம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் மார்ச் 28ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த பிரகாஷ்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.