
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு, பகல் பராமல் பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள கட்டிமேடு - ஆதிரங்கம் கிராமங்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது.
இப்பகுதி ஜமாத் சார்பில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களுக்கும் உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
இப்பகுதிக்கு மின் இணைப்பை கொடுப்பதற்காக இரவு - பகலாக மின் வாரிய ஊழியர்கள் பாடுபடுவதை மக்கள் கண்கூடாக பார்த்து வியந்தனர்.

அவர்களின் கடமை உணர்வை போற்றி, கட்டிமேடு - ஆதிரங்கம் ஜமாத்தினர், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின்பு, மின் வாரிய ஊழியர்கள் 75 பேரை, பள்ளி வாசலுக்கு வரவழைத்து அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, பிரியாணி விருந்தும் அளித்தும் சிறப்பித்தனர்.
எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி அனைவருக்கும் பிரியாணியை பரிமாறி, அவர்களின் தொண்டுக்கு நன்றி கூறினார். இந்த நெகிழ்வான ஏற்பாட்டை செய்த தற்காக. ஜமாத்தையும் பாராட்டினார்.
எங்கள் வாழ்நாளில் இந்த அன்பை மறக்கவே மாட்டோம் என அந்த மின் ஊழியர்கள் நெகிழ்ந்து விட்டனர். அவர்கள் பெரும்பாலும் செஞ்சி உள்ளிட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.