Skip to main content

எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் மரங்களை வெட்ட இடைக்காலத் தடை!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, 75 மரங்களை வெட்ட இடைக் காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

egmore eye hospital case

 

 

உலகிலேயே  பழமை வாய்ந்த இரண்டாவது கண் மருத்துவமனையாக, எழும்பூர் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக, அங்குள்ள 4 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் வளர்ந்துள்ள சுமார் 75 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் எழும்பூரைச் சேர்ந்த கேப்டன் நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் இல்லாத காலியிடங்கள் இருக்கும் நிலையில், தற்போது இருக்கும் மரங்களையும் வெட்டினால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கஜா புயலினால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்ட நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை, தனி நபரோ? ஊழியர்களோ? அல்லது நிர்வாகமோ? வெட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது. மரங்களை வெட்ட முடிவு எடுத்துள்ள மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என  கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்தனர். மேலும், புதிய கட்டிடம் கட்டுவதற்கான மாற்று இடங்கள் எவை? தற்போதுள்ள மரங்களை பாதிப்பு ஏற்படாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளனவா? என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 2 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்