Skip to main content

தமிழகத்தில் நடக்கும் வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்க்கிறது மத்திய அரசு: தே.மு.தி.க. கண்டனம்

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
dmdk


தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டிப்பதாக தேமுதிக தலைமை செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. 
 

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 04.07.2018 புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்திலே எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பெண்களிடம் செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுகொண்டேபோகிறது. தமிழகத்திலுள்ள மத்திய அமைச்சர் அவர்களே “தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது” என்று குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு தமிழகம் சீர்கெட்டுக்கிடக்கின்றது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக எடப்பாடி தலைமையிலான அரசு, கமிஷன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மணல் கொள்ளை, டாஸ்மாக் ஊழல், நெடுஞ்சாலை துறையில் ஊழல், பொதுப்பணித்துறையில் ஊழல் என்று தமிழகத்திலுள்ள அனைத்து துறைகளிலும் தங்களுடைய ஆட்சியிலே ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதைப்போல, எத்தனை சதவிகிதம் கமிஷன் வாங்குவது எப்படி என்பதைப் பற்றி தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவரும் பொது நிகழ்ச்சிகளில் விவாதித்துக்கொள்வதை ஊடகங்கள் மூலமாகவும், பத்திரிக்கைகள் மூலமாகவும், பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே தமிழகத்திலே நடக்கின்ற வெளிப்படையான ஊழல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.    

 

 

 

பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்திட எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த மத்திய அரசின் நடவடிக்கையினால், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினால் ஏழை, எளிய, நடுத்தர அனைத்துத்தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். 
 

மத்திய அரசு சென்ற ஆண்டு GST வரியை கொண்டுவந்த போது, பெட்ரோல், டீசல் GST வரிக்குள் கொண்டுவந்திருந்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டிருக்காது. உடனடியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டுவரவேண்டுமென்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

தமிழகத்தில் உள்ள தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை அமைக்கப்படும் என்கிற மத்திய அரசின் திட்டத்தையும், இந்திய திருநாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தகுந்த தரமான சிகிச்சை பெறுகின்ற வழியில் மத்திய அரசு அமல்படுத்த இருக்கின்ற தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தையும் இச்செயற்குழு வரவேற்கிறது.

சிறந்த சிகிச்சை என்பது மருத்துவர்களின் சேவையினால் மட்டுமல்லாது, போதிய நிதி வசதியுடன் அமைந்திட வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் குறிப்பிட்டுள்ள சிகிச்சைக்கான நிதி போதுமானதாக இல்லை என்பதுடன், மிகவும் குறைந்த மதிப்பீட்டில் உள்ளது. இது தரமற்ற சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்பதுடன், சிகிச்சைக்கான செலவுத்தொகையை உயர்த்தி, தரமான சிறந்த சிகிச்சை வழங்கிட மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

 

விவசாய பயிர் பாதுகாப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்தி, முழுபயனையும் விவசாயிகளுக்கு விரைந்து உடனடியாக கிடைத்திட ஆவண செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.  

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, டீசல் மீதான வரி குறைப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, இந்தியா முழுவதும் உள்ள 68 லட்சம் லாரி உரிமையாளர்கள் ஜூலை 20 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
 

குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் ஏற்றிச் செல்லுகின்ற டேங்கர்லாரிகள் கூட இப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்ற பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தை உடனடியாக அழைத்து பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

 

 


சென்னையில் நடைபெற்று வந்த அம்பேத்கார் சட்டக்கல்லூரியை திருப்போரூர் அருகே புதுப்பாக்கத்திலும், மேலும் திருவள்ளூர் பட்டறை பெரும்புதூரில் புதிய அரசு சட்டக்கல்லூரி திறக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பாண்டில் புதிதாக சேருகின்ற சட்டக்கல்லூரி மாணவர்களை புதிதாக திறக்கப்பட்ட சட்டக்கலூரியில் சேர்த்திடவும், ஏற்கனவே சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை அவர்கள் படிப்பு முடியும் வரை புதிய கல்லூரிக்கு மாற்றாமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்வதுடன், புதியதாக திறக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி, உணவு வசதி, போன்ற அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

கடலூர் உழவர் சந்தை பகுதியில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் வாக்கு சேகரிப்பு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
DMDK Treasurer Sudish Vote Collection at Cuddalore Farmers Market Area

தேமுதிக பொருளாளர் சுதீஷ், கடலூர் நாடாளுமன்ற  அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு   குள்ளஞ்சாவடி பகுதியில்  வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,  இந்த தொகுதியில் போட்டியிடும் சிவக்கொழுந்து ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சுமார் 40 ஆண்டுகள் பயணித்து உள்ளார். 2006 ல் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் அதிமுக, தேமுதிக கூட்டணி 2011 ம் ஆண்டு பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ சிறப்பாக பணியாற்றியவர்.

அவருக்கு தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பது நன்றாக தெரியும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவரும் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. திமுகவில்  ரூ.500 கோடி, ஆயிரம் கோடி இருந்தா தான் எம்பி ஆக முடியும்.  இவர் வெற்றி பெற்றால் உங்கள் கோரிக்கைகள்  ஆறு மாதத்தில் தீர்த்து வைப்பார்.  கடலூர் மாவட்டம் எங்கள் சொந்த மாவட்டம்,எனது சகோதரி இந்த மாவட்டத்தில் வசிக்கிறார்.   வேட்பாளர்  சிவக்கொழுத்துக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்  பேசினார்.

அதிமுக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர். சனிக்கிழமை  காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடை பயிற்சி மேற்கொண்ட வாரே தேமுதிக பொருளாளர் சுதீஷ், நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து  அவர் கடலூர் உழவர் சந்தை பகுதி சென்று அங்கு உள்ள வியாபாரிகளிடம் காய்,கறி விலைகளை கேட்டறிந்து வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆற்றியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் அதிமுக அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.