![Discrimination in goat distribution scheme ..](http://image.nakkheeran.in/cdn/farfuture/2QcYIR2ioFzSqB_DQ2pZzuUxZh9q58bzD1HW_u22H9s/1608709143/sites/default/files/inline-images/th-1_148.jpg)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள வேம்பூண்டி கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரசு இலவசமாக ஆடுகள் வழங்கும் திட்டத்தின்படி நேற்று இந்த ஊரில் உள்ள 50 நபர்களுக்கு டோக்கன் வழங்கியுள்ளனர் அதிகாரிகள்.
இந்த திட்டத்தின்படி, கிராமத்தில் உள்ள விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மிக ஏழ்மையிலும் வறுமையிலும் உள்ள குடும்பங்களுக்கு அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட வேண்டும் என்பது அரசு விதிமுறைகள். ஆனால், இந்த ஊரில் அ.தி.மு.க. கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச ஆடுகள் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்படுவதாகக் கூறி அந்த கிராம மக்கள் நேற்று அந்த ஊரின் அருகே உள்ள திண்டிவனம் கிருஷ்ணகிரி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன், விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், நேரில் வந்து உண்மையான பயனாளிகளைத் தேர்வு செய்து ஆடு, மாடுகள் வழங்கப்படும். பாரபட்சம் இல்லாமல் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
அப்போது பொதுமக்களுக்கும் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில், கிராம மக்கள் சாலைமறியலைக் கைவிட்டனர். இதனால் திண்டிவனம் கிருஷ்ணகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.