சிறுமலை வனப்பகுதியில் வீசப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி வீசியவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கிகள் சிக்குவதால் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை சுற்று வட்டாரத்தில் பெரும்பாலானோர், நாட்டு துப்பாக்கியை வைத்து இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி ரவளி பிரியா எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் சிறுமலை அருகே தென்மலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் 4 நாட்டுத் துப்பாக்கிகள் கிடந்தன இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்த குமார் கொடுத்த தகவலின்பேரில், திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம் மற்றும் எஸ்.ஐ. அழகுபாண்டி, வனசரகர் மனோஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று நான்கு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 துப்பாக்கி குழல்களை கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வனப்பகுதியில் துப்பாக்கிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? இவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி சிறுமலை வனப்பகுதியில் இருந்து 28 நாட்டுத் துப்பாக்கிகள் இதுபோல் வீசப்பட்டு இருந்ததை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் சிக்கி வருகின்றது. வேட்டை அல்லது சமூக விரோத செயல்கள் நடக்கிறதா? என போலீசார் வனத்துறையினர் விசாரிக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் எஸ்.பி.ரவளி பிரியாவை வலியுறுத்தி வருகின்றனர்.