Skip to main content

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; தீர்ப்பைக் கேட்டு தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

Cuddalore Girl child case POCSO Court verdict

 

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் அதேபகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு உணவு கொண்டுபோவது வழக்கம். அப்படி 12.02.19 அன்று இரவு உணவு கொண்டுபோன சிறுமி, உணவைக் கொடுத்துவிட்டுத் திரும்பி தனது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தபோது, சேத்தியாத்தோப்பு - கும்பகோணம் சாலையில் உள்ள அவர்களது குல தெய்வம் கோவில் அருகில் வந்துகொண்டிருந்தார். அப்போது, குமாரக்குடியைச் சேர்ந்த பாலகுரு மகன் தொழிலாளி திலகர் என்கிற குணசேகரன் (வயது 34). தொழிலாளி கட்டமணியார் என்கிற ஜெயசங்கர் (49) ஆகிய 2 பேரும், அந்த சிறுமியை வழிமறித்து, அருகிலிருந்த கோயிலின் பின்புறத்திற்கு வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று இருவரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். 

 

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடன் அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

அப்போது அச்சிறுமி தனக்கு நடந்த பயங்கரத்தைத் தனது தாயிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது தாய், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திலகர், ஜெயசங்கர் ஆகிய 2 பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

 

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி எழிலரசி அறிவித்தார். அதில், இவ்வழக்கில் சிறுமியைத் தாக்கிய திலகருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச்சென்ற குற்றத்திற்காகத் திலகர், ஜெயசங்கருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்புக் கூறினார். மேலும், சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடுங்குற்றத்திற்காக 2 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்து, ஈடு செய்ய முடியாது என்றாலும், அவர் தன்னிச்சையாக வாழ வழிவகை செய்யும் வகையில், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர், மாநில அரசுத் திட்டங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். 

 

இந்தத் தீர்ப்பைக் கேட்டுக்கொண்டிருந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான ஜெயசங்கர் தனது சட்டைப் பையில் வைத்திருந்த மாத்திரைகளை மொத்தமாகத் தனது வாயில் போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அங்கிருந்த காவல்துறையினர் கவனித்து உடனடியாக அவரது வாயிலிருந்து மாத்திரைகளை வெளியே எடுத்தனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்