சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. ஏழை, பணக்கார நாடுகள் வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் இந்த கரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இன்னிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்படுவதோடு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகமே கரோனா அச்சத்தில் தவிக்கும் இன்னிலையிலும் மாஸ்க்கை கூவி கூவி விற்பது போன்ற சுவாரசி சம்பவங்களும் நடைபெறத்தான் செய்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் அரசு பேருந்து ஒன்றில் கரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பதற்காக பேருந்தின் ஜன்னல்கள், கைப்பிடிகள் போன்றவற்றில் வேப்பிலை கட்டப்பட்டும், பேருந்து முழுவதும் மஞ்சல் கரைசல் தெளிக்கப்பட்டும் இருப்பது கரோனா பீதியிலும் சுவாரசியம் தரும் நிகழ்வாக உள்ளது.