Skip to main content

"என்னையும் எனது குடும்பத்தையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துகள்" -கோவையில் பேனர் வைத்தவர் கைது!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

corona banner issue in covai

 

கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் (31). மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கரோனா தொற்று இருப்பதாக, மாநகராட்சி நிர்வாகத்தினர் இவரது வீட்டை தனிமைப்படுத்தி, வழக்கமாக வைக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று பேனரும் வைத்திருந்தனர். இவரது மனைவிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானதால் அவர்களின் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாநகராட்சி பேனர் அருகிலேயே மற்றொரு பேனரை இளவரசன் வைத்திருந்தார். "எனது குடும்பத்துக்குத் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொண்டபோது, கரோனா இல்லை என முடிவுகள் வந்தன. ஆனால், எங்களுக்குக் கரோனா இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்" என்ற வாசகத்துடன் பேனர் வைத்திருந்தார். மேலும் அந்த பேனரில் அவர்கள் நான்கு பேரின் தனியார் பரிசோதனை முடிவுகளையும் அவர் ப்ரிண்ட் செய்து வைத்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை இளவரசனுக்குக் கண்டனம் தெரிவித்து, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், "மேற்கண்ட இளவரசனின் மனைவிக்குக் கடந்த ஆக. 17-ஆம் தேதி கரோனா உறுதியானது. அவர் கொடிசியா மையத்தில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். அவர்களது குடும்பத்தினர் ஒத்துழைப்பு தராததால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் 14 நாட்கள் அவர்கள் வெளியில் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

 

தடையை மீறி இளவரசன், தன் தந்தையை வேடப்பட்டியில் இருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். 25-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது தந்தை உயிரிழந்தார். 27-ஆம் தேதி மேற்கண்ட பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி, 2 மகள்கள், தாய் ஆகியோருக்குக் கரோனா இருப்பது உறுதியானது.

 

மாநகராட்சி அறிவுறுத்தியும், மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இச்சூழலில், கடந்த 4-ஆம் தேதி தடையை மீறி தனியார் ஆய்வகத்துக்குச் சென்று பரிசோதனை செய்து, தங்களுக்குக் கரோனா இல்லை என சான்று பெற்று, மாநகராட்சியைக் கண்டித்து பேனர் வைத்துள்ளனர்.

 

மேலும், இளவரசன் ஆரம்பத்தில் இருந்தே மாநகராட்சியின் நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மாநகராட்சி அனுமதி பெறாமல், நோய் பரப்பும் விதமாகச் செயல்பட்டதாலும் அவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகளால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இளவரசனின் மேற்கண்ட செயலுக்கு கண்டனமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

 

Ad

 

இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், இளவரசன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது 270, 261 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இளவரசன் நேற்று (செப். 10) இரவு கைது செய்யப்பட்டு பின், காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்