சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் அரசுப் பேருந்தின் மேல் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, முந்தைய காலங்களில் 'பஸ் டே' 'காலேஜ் டே' எனக் கல்லூரி மாணவர்கள் சிலர் இதேபோல் அரசுப் பேருந்து மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாகி இருந்தது. இந்நிலையில் தியாகராஜா கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் பழைய வண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலை பாண்டியன் திரையரங்கம் அருகே தடம் எண் 56 ஏ என்ற மாநகரப் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டும், பேருந்தின் முன்புறம் நின்றும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை பேருந்து எண்ணூரிலிருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது, இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.