குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பெண்ணை நிர்வாணமாகப் படம் எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 36 வயதான பெண்ணுக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் வசிக்கும் தனது தோழியைப் பார்க்க அவர் சென்றிருந்தபோது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த தோழியின் கணவர் மகேஷ்குமார், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, நிர்வாணமாகப் படம் எடுத்தும் வைத்துள்ளார்.
நிர்வாணப் படத்தைக் காண்பித்து மிரட்டி, அப்பெண்ணிடம் இருந்து சுமார் 100 பவுன் நகை மற்றும் ஏராளமான பணத்தை மிரட்டிப் பெற்றுக் கொண்டதாகவும், அதனைத் திருப்பிக் கேட்டபோது, தன்னையும், தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தவிர, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களைக் கூட்டி வந்து மிரட்டியதாகவும், அப்பெண்ணை, தற்கொலைக்குத் தூண்டியதாகவும், ராயபுரம் காவல் நிலையத்தில் நிலையத்தில் அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கக்கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவர் மனுத் தாக்கல் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தன்னைப் பலாத்காரம் செய்து மிரட்டியவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று உத்தரவிடக்கோரி, புகார்தாரரான பாதிக்கப்பட்ட பெண் சார்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுப்பார் என்றும், ஆதாரங்களை அழித்துவிடுவார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி செல்வகுமார், முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.