
விழுப்புரம் சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தில் புதிய அதிர்ச்சி தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவகுரு என்ற நபருக்குச் சொந்தமான தள்ளுவண்டியில் 5 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிறுவனின் பெயர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அங்குள்ள மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில் உணவு, தண்ணீரின்றி பசியால் சிறுவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சிறுவனின் புகைப்படத்தை வைத்து தற்பொழுது காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதற்கிடையே தற்போது அங்குள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் அந்த தள்ளுவண்டியில் சிறுவனை மர்ம நபர்கள் இருவர் கொண்டுவந்து வைத்து விட்டு சென்றது தற்போது தெரியவந்துள்ளது.