Skip to main content

நெல்லையில் பாஜக ஆர்ப்பாட்டத்தால் பதற்றம்...

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக குண்டாறு பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர் அப்போது இந்து அமைப்பினருக்கும் மற்றோரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பின்னர் சிலைகள் கொண்டுபோய் கரைக்கப்பட்டன. 

 

bjp

 

இந்த சம்பவத்தில் இரண்டு தரப்புகள் மீதும் வீடியோ ஆதரப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும் அந்த  வீடியோ ஆதரத்தை வைத்து போலீசார் இரண்டு தரப்பிலும் மோதலுக்கு காரணமானவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். 

 

 

அந்த தடை உத்தரவு இப்போது வரையிலும் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் இன்று பாஜகவினர் மோதலை கண்டித்து செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. அதற்கு தலைமை ஏற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். முதலில் தமிழிசை தூத்துக்குடி விமானம் மூலம் வருவதாக இருந்ததால் அங்கும் பாதுகாப்பு போடப்பட்டது.

 

bjp

 

தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதிக்குள் அவர் வந்தால் 144 தடை உத்தரவு இருப்பதால் அவரை வழிமறிப்பதாகவும் போலீசாரிடம் திட்டம் இருந்தது. இந்தநிலையில் தமிழிசை மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து காரில் நெல்லை வந்தார். நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு வந்தார். வழியில் அவரை மறிப்பதற்காக போலீசார் ஆலங்குளம் நகரில் இன்று காலைமுதல் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டார்கள்.

 

bjp

 

அதன்பின் தென்காசி செல்லும் வழியில் உள்ள ஆலங்குளத்தில் தமிழிசையை போலீசார் மறித்தார்கள். அவரிடம் அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை எடுத்து சொன்னார்கள். இதனை அடுத்து பாஜகவினர் ஆலங்குளத்திலேயே இன்று மதியத்திற்கு மேல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பாஜக மாவட்ட செயலாளர் குமரேச சீனிவாசன், முருகானந்தம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ நைனார் நாகேந்திரன் போன்ற பாஜகவினர் திரளாக கலந்துகொண்டனர். ஆர்பாட்டத்தின் பொழுது இந்து அமைப்பினர் மீது போடப்பட்ட வழக்குகளை விளக்கிக்கொள்ளும்படி கோஷமிட்டார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.